எல்கேஜி – விமர்சனம்

சமகால அர்சியலை நையாண்டி செய்யும் காமெடித்துணுக்குகள் சமூகவலைத்தளஙளில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றை தொகுத்து, இத்துனூண்டு கதையோடு இணைத்தால், அது தான் ‘எல்கேஜி’ திரைப்படம்.

‘பிழைக்கத் தெரியாத’ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் மகன் (லால்குடி கருப்பையா காந்தி – எல்கேஜி) ஆர்ஜே பாலாஜி. வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல், எகிடுதகிடு ஏதாவது செய்து பெரிய பதவியைப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் முதல்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார். அந்தப் பதவிக்கு ஜி.ராம்குமார் வருகிறார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் ஆர்ஜே பாலாஜி, தேர்தலுக்கு ஆட்களை புரமோட் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கள் செய்யும் தகிடுதத்தத்தால் ஆர்ஜே பாலாஜிக்கு இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கிறது. ஆனால், அவருக்குப் போட்டியாக மக்கள் ஆதரவு பெற்ற ஜெ.கே.ரித்தீஷ் களத்தில் குதிக்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? ஆர்ஜே பாலாஜியின் லட்சியம் நிறைவேறியதா? இதுதான் எல்.கே.ஜி. படத்தின் கதை. நண்பர்களுடன் சேர்ந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

கடந்த இரண்டு  ஆண்டுகால தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கொத்துபரோட்டாவாகப் போட்டு நையாண்டி செய்யும் துணுக்குத் தோரணம்தான் படம். தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்; என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்  என்று அடுக்கிக் காட்டுகிறார் இயக்குநர் கே.ஆர்.பிரபு.  ஆனால், அதில் ‘ஸ்பூஃப்’ பாணிக்குத் தேவையான கூடுதல் கற்பனை வளம் இல்லாமல் ‘ரா’வான காமெடி ஆக்கியிருக்கிறார்கள். மருத்துவமனையில் அமைச்சர்கள் தங்குவது, முதல்வர் இறப்பது, நள்ளிரவு பதவியேற்பு, இடைத்தேர்தல், ஆற்றில் தெர்மோகோல் விடுவது, 20 ரூபாய் டோக்கன் என சமகால அரசியல் நிகழ்வுகளைக் காட்டும்போது தியேட்டரில் சிரிப்பலைக்குப் பஞ்சம் இல்லை.

தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டுகள் சமூக வலைதளங்களில் செய்யும் ஜித்து வேலைகளையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சமூக வலைதளங்களில் வைரலாகும் டிரெண்ட்டிங் விஷயங்களைக் கலாய்த்திருப்பதும் நேர்த்தி.

‘மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத்தால் திருவள்ளுவரைக்கூட தாலிபன் ஆக்கி விடுவார்கள்’ என்றும் ‘யார் பணம் கொடுத்தாலும் கார்ப்பரேட்டுகள் வேலை செய்வார்கள்’ என்றும் வருகிற வசனங்கள் அப்படியே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

வெறுமனே அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக கிளைமாக்ஸில் அறிவுரைகளை அள்ளி விடுவது சலிப்பூட்டுகிறது. காமெடி என்ற பெயரில் பில்ட்-அப் செய்யப்பட்டிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியில் போதிய புத்திசாலித்தனம் இல்லை.

ஊரை அடித்து உலையில் போட்டாவது பெரிய பதவிக்கு வரத் துடிக்கும் ஒரு பலே கவுன்சிலருக்கு, அவருடைய சொந்த தொகுதியிலேயே வருடக்கணக்காகக் கோலோச்சிய ஜெ.கே. ரித்தீஷைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பது எந்த ஊர் லாஜிக்கோ!

திடீர் முதல்வராகும் ஜி.ராம்குமாருக்கு தன் கட்சியையே பகைத்துக் கொண்டு ஆர்ஜே பாலாஜிக்கு ஸீட் தர வேண்டிய அவசியம் என்ன என்பதும் நம்பும்படியாக சொல்லப்படவில்லை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி முழு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறார். டுபாகூர் அரசியல்வாதிக்கான அவரது உடல் மொழியும் கச்சிதம். அனால், ஏன் இப்படி பல இடங்களில் காது ஜவ்வைக் கிழிக்கிற மாதிரி கத்துகிறார்? அதுவும் போதாமல், கற்பனையான ஒரு நாளிதழின் தலைப்பை ‘சிலேடை’ பண்ணி அவர் சொல்கிற வார்த்தையில் காது கூசுகிறது.

நாயகியாக வரும் பிரியா ஆனந்த் தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டாக வருகிறார். அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் நாஞ்சில் சம்பத் நடிக்க வாய்ப்பு குறைவு தான் என்றாலும், படத்தில் திருக்குறள் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். முதல்வராக வரும் ராம்குமார், உதவியாளராக வரும் மயில்சாமி ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை லியேன் ஜேம்ஸ். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்…’ என்ற ரீமிக்ஸ் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.

எத்தனைதான் ஓடி உழைத்தாலும், ஒரே ஒரு சறுக்கலை வைத்தே ஆளை காலி செய்வதற்கு ஒரு கூட்டம் காத்திருப்பதும், அதற்கு லைக் – ஷேர் போட்டு கொண்டாடும் மக்கள் மனோபாவத்தையும் நறுக்கென சொன்ன விதத்தில் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாகவும்… நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி ஜெயித்துவிட்டார்.

அதேசமயம், தட் ஒன் ட்வெண்டி ருப்பீஸ் டிக்கெட், பாப்கார்ன் பக்கெட், பார்க்கிங் கொள்ளை எல்லாம் சேர்த்து கொடுக்கிற காசுக்கு எல்கேஜி தகுமா என்பதை ஆர்ஜே பாலாஜிதான் சொல்ல வேண்டும்.