திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனையில், திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், உதயசூரியன் சின்னத்தில் தங்கள் கட்சி போட்டியிட உள்ளதாகவும், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.