கும்பாரி – விமர்சனம்

நடிப்பு: விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், மதுமிதா, பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார், மீனாள், ராயன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கெவின் ஜோசப்

இசை: ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி

ஒளிப்பதிவு: பிரசாத் ஆறுமுகம்

படத்தொகுப்பு: டி.எஸ்.ஜெய்

தயாரிப்பு: ‘ராயல் எண்டர்பிரைசஸ்’ டி.குமாரதாஸ்

வெளியீடு: 9வி ஸ்டூடியோஸ்

பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்

’கும்பாரி’ படக்கதை கன்னியாகுமரி பகுதியில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.கேபிள் டிவி ஆபரேட்டரான நாயகன் அருணும் (விஜய் விஷ்வா), மீன்பிடி தொழில் செய்பவரான ஜோசப்பும் (நலீப் ஜியா) நண்பர்கள். பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர்  விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள்.

ஒருநாள் நாயகி தர்ஷினிவை (மஹானா சஞ்சீவி) நாலைந்து ரவுடிகள் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள். அவர் மூச்சு முட்ட தப்பி ஓடுகிறார். வழியில் கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் உதவி கேட்கிறார். யாரும் உதவ முன் வரவில்லை. பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த நிலையில், இதைப் பார்த்த நாயகன் அருண், அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்போது, “என்ன நீ நிஜமாகவே அடிக்கிறாய்?” என்கிறார்கள். பிறகுதான் தெரிகிறது. அது தர்ஷினி நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. இதை அறிந்து தர்ஷினியை அருண் ஓங்கி அறைந்து விடுகிறார் . ”உன் சேனலை மக்கள் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா?” என்று திட்டுகிறார். அந்த பிராங்க் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது.

அருணின் துணிவும் அவரது குணமும் பிடித்துப்போய் தர்ஷினி, அந்த மோதலுக்குப் பின் காதலில் விழுகிறார். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் ஒரு சிக்கல் உண்டு. தர்ஷினிக்கு திருமண வயது ஆக வேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன. அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள். அதனால் வீட்டைவிட்டு வெளியேறி பல இடங்களுக்கு இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இருவரையும் சேர்த்துவைக்க நண்பர் ஜோசப் உதவுகிறார்.

தர்ஷினியின் அண்ணன் துரை (ஜான் விஜய்)  அடியாட்களை வைத்துத் துரத்துகிறார். காதலுக்கு உதவிய நண்பனையும் பழி வாங்கத் துடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜோசப் காணாமல் போகிறார்.

நண்பன் காணாமல் போனதால் துரை கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதாக அருண் நம்புகிறார் .அதற்காக நீதிமன்றம் சொல்கிறார். ஆனால் அவர் கொலை செய்யப்படவில்லை, நடந்தது வேறு என்று காட்சிகள் வருகின்றன.

அவருக்கு என்ன ஆயிற்று? அருண் காதல் என்ன ஆனது? காதலர்களை வெறியோடு துரத்தும் துரை கும்பல் என்ன செய்கிறது? முடிவு என்ன? என்பது தான் ’கும்பாரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

படம் ப்ளாஷ் பேக் எனப்படும் முன்கதை சொல்வது போல் ஆரம்பித்து கடந்த காலத்தில் பயணித்து நகர்கிறது. இதில் ஒரு காதல் கதையும், அண்ணன் – தங்கை பாசக்கதையும் பின்னிப் பிணைந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.

துரை என்கிற பெயர் கொண்ட ஜான் விஜய், தர்ஷினி என்கிற பெயர் கொண்ட மஹானா மீது அளவற்ற பாசம் வைத்துள்ள அண்ணன்.

ஆர்த்தி பாத்திரத்தில் நடித்துள்ள மதுமிதா, தர்ஷினியின் காதலுக்கு உதவுகிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு  ஓடுகிறார்கள் . ஜான்விஜய் மட்டுமல்ல அவரது சித்தப்பா சித்தப்பு சரவணனும் அவர்களைப் பிடித்து விடுவதாக கூறுகிறார். ஆட்களைத் திரட்டுகிறார்கள்.

இப்படி அடியாட்கள் துரத்த, அவர்கள் கடலுக்குள் சென்று தப்பிக்க, மீண்டும் துரத்த இவர்கள் ஆறு ,மலை என்று தண்ணீர் காட்ட, முடிவு என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும்,அவரது நண்பனாக ஜோசப் பாத்திரத்தில் நடித்துள்ள நலீப் ஜியாவும் நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக நண்பன் ஜியா பாத்திரத்திற்கு நடிப்புத் தருணங்கள் அதிகம்.

தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட மதுமிதா, ஆர்த்தி கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் மிகை ரகம். குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட மீனாள் இதில் காமெடி என்ற பெயரில் நம்மைச் சோதிக்கிறார்.

ஒரு பரபரப்பான காதல் கதையாக இருக்க வேண்டியதை ஆங்காங்கே அறுவை ஜோக்குகளுடன் அசட்டுத்தனமான காட்சிகளை வைத்து அலுப்பூட்டி விடுகிறார்கள்.

குறிப்பாக ஜான் விஜய் தனது தங்கையிடம் பாசம் காட்டுவதாக அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் நாடகத்தனமானவை. மிகை நடிப்பின் உச்சமாக உள்ளன. வீரத்துக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்ற பருத்திவீரன் சரவணனை ஒரு காமெடியன் ஆக்கி வெறுப்பேற்றி உள்ளார்கள்.

ஜான்விஜய்யின் அல்லக்கையாக காமெடி நடிகர் சாம்ஸ் வருகிறார். தன்னால் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஒல்லியான குடிகாரன் பாத்திரத்தில் வரும் ராயன் கூட சிரிப்பு மூட்டுகிறார்.

படத்தின் பெரிய பலமாக இருப்பது பிரசாத் ஆறுமுகம் செய்துள்ள ஒளிப்பதிவு என்று கூறலாம். கன்னியாகுமரி மண்ணின் அழகு, அருவி, ஆறு, கடல் என்றும் பச்சைப் பசேல் இயற்கைப் பிரதேசங்களையும் தன் கேமராவுக்குள் சிறைப்படுத்திக் காட்சிப்படுத்தியுள்ளார். நடுக்கடலில் கதாநாயகனை வில்லனின் படகுகள் சுற்றி வளைப்பதை ட்ரோன் மூலம் படம் ஆக்கி உள்ளது நன்றாக உள்ளது.

இசையமைப்பாளர்களும் தங்கள் பங்கைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

குமரி மாவட்ட வட்டார வழக்குகளைக் கோர்த்து படத்தின் ஆரம்பத்தில் குமரித் தமிழில் ஒலிக்கும் ‘அவியே இவியே எல்லாரும் நில்லுங்க’ பாடல் கவனிக்க வைக்கிறது. அதைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் பொருத்தம்.

இரண்டாவது பாதியில் ஒலிக்கும் ‘நானும் நீயும் சேந்திடவே மனம் ஏங்குதே’ பாடல் இனிமை ரகம்.

கும்பாரி என்பது நண்பன் என்கிற பொருள்படும் சொல்லாகப் படத்தில் கூறப்படுகிறது. 115 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் நட்பு ,காதல், அண்ணன் தங்கை பாசம் என மூன்றையும் சொல்ல முயன்றுள்ளார்கள். .ஒளிப்பதிவு, இசை போன்றவை  வலுவாக உள்ளது. காட்சிப்படுத்தல்களில், பாத்திரச் சித்தரிப்புகளில் ஆழம்  இன்னும் இருந்திருக்கலாம். சிறிய பட்ஜெட்டில் அவர்களால் முடிந்த உயரத்தில் ஒரு படத்தைக் கொடுத்துள்ளார்கள்.