காவியன் – விமர்சனம்

தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும் பயிற்சி அளிக்கிறார். நம்ம ஊர் போலீஸ் அவசர உதவி எண் 100 போல், அங்கு 911 என்ற நம்பர் செயல்பட்டு வருகிறது.

இந்த கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார். இந்நிலையில், மர்ம நபரால் பாதிக்கப்படுவதாக ஒரு பெண் 911க்கு போன் செய்கிறார். இதை கேட்கும் ஸ்ரீதேவி, அவருக்கு உதவ நினைக்கிறார். ஆனால், முடியாமல் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார்.

இதையறியும் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார். சில தினங்களில் மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா? பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாம், புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வழக்கமான ஷாமை மட்டுமே பார்க்க முடிகிறது. ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இலங்கை பெண்ணாக நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபம் பட வைக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாமுடன் பயணிக்கும் ஸ்ரீநாத்தின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதற்கான வாய்ப்பும் சரியாக அவருக்கு கொடுக்கப்படவில்லை.

நல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்தசாரதி. ஆனால், நீண்ட நேரம் கதை செல்வதுபோல் அமைத்திருக்கிறார். அதுபோல் சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை செல்கிறது. இதில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

மொத்தத்தில் ‘காவியன்’ சாதாரணமானவன்.