ஒரிஜினல் பாக்ஸர் துளசியிடமிருந்து இயக்குனர் சுதா திருடிய கதை ‘இறுதிச்சுற்று’?

மாதவன், ரித்திக்கா சிங் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “இறுதிச்சுற்று’ படத்தின் கதை அதன் இயக்குனர் சுதா கொங்கராவுக்குச் சொந்தமானது இல்லை என்றும், அது ஒரிஜினல் குத்துச்சண்டை வீராங்கனை துளசி என்பவரிடமிருந்து திருடப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் உலா வரும் தகவல் வருமாறு:

“சினிமாவில் நம்பிக்கை துரோகம் என்பது காலம்காலமாக பார்த்து வருவது தான். ஆனால் குத்துச்சண்டை வீராங்கனை துளசிக்கு நிகழ்ந்தது பெரிய ஷாக். ‘துரோகி’ பட தோல்விக்குப் பின் தன்னை நிலைநிறுத்த இயக்குனர் சுதா கொங்கரா எடுத்துக்கொண்ட விஷயம் ஸ்போர்ட்ஸ் சினிமா. ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் சினிமாவுக்கு கதை கொடுத்தவர் நம் சென்னையைச் சேர்ந்த துளசி.

துளசி சென்னை பீச் பகுதியில் வசிக்கும் ஒரிஜினல் பாக்ஸர். அவரது கதையை சுமார் பத்து நாட்கள் உடன் தங்கிக் கேட்ட சுதா, அதை வைத்து உருவாக்கிய சப்ஜெக்ட் தான் ‘இறுதிச் சுற்று’. படம் வெளிவந்த பிறகு ‘உன் கதையைத் தான் எடுத்துருக்காங்க…’ என நண்பர்கள் சொல்ல, தியேட்டர் போய் பார்த்த துளசிக்கு அதிர்ச்சி. தனக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை என ஆதங்கம். படம் வெளியான பிறகு சுதாவிடம் இருந்து ஒரு கால் வந்திருக்கிறது. ‘மீடியாவுக்கு போக வேண்டாம். நானே சந்திக்கிறேன்’ என்று சொன்ன சுதா, அதன் பிறகு வரவும் இல்லை. போனையும் எடுக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் இந்த தகவலுக்கு இயக்குனர் சுதாவின் பதில் என்ன?