திட்டமிட்டபடி ‘அயலான்’ ரிலீஸ் உறுதி: இடைக்கால தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை  நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஜன.12ஆம் தேதி ‘அயலான்’ ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்தக் கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை அயலான் அல்லது வேறு எந்த படத்தை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன்பு திருப்பித் தருவதாக 2021-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை தராததால், ‘அயலான்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அயலான்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்திருந்த டி. எஸ்.ஆர் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ‘அயலான்’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.

இதேபோல், இதே தயாரிப்பு நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடி ரூபாயை செலுத்தாததால் ‘அயலான்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி எம். எஸ் சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்து. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் படத்துக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக எம்.எஸ். சேலஞ்ச் நிறுவனத்துக்கு படத் தயாரிப்பு நிறுவனம் 50 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘அயலான்’ நாளை வெளியாக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.