இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை சம்பவத்தை சொல்லும் படம் ‘காஸி’!

1971ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் ‘காஸி’. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும். முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப்.

‘காஸி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி.யின்  நிர்வாக இயக்குனர் கே.கே ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நாயகன் ராணா டகுபாதி பேசும்போது, “என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விப்பட்ட காஸி போர் தான். இப்படத்தின் கதை. ப்ளூ ஃஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது. இப்படமானது விசாகபட்டினத்தில் 71 நாட்கள் நடந்த, யாரும் அறிந்திராத, கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும். ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்” என்று கூறினார்.

இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில், “என்னுடைய முதல் படமே, இதுவரை சொல்லபடாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளார் கே பேசுகையில், “இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என கூறினார்.

இந்திய சினிமா வரலாற்றில் பல தேசபற்று படங்கள் வந்திருந்தாலும், சொல்லபடாத வரலாற்றை சொல்லும் இந்த ‘காஸி’ இனி வரும் காலங்களில் சொல்லும் படியான வரலாற்றை படைக்கும்.