“அம்மா கணக்கு’ படத்தை தயாரித்ததற்கு பெருமைப்படுகிறேன்!” – தனுஷ்

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 24ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

‘அம்மா கணக்கு படம் தயாரித்திருப்பது குறித்து தனுஷ் கூறுகையில், “அம்மா கணக்கு’ படத்தை என்னுடைய படமாகக் கருதுகிறேன். இப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆனந்த் எல்.ராயை வேறு ஒரு விஷயமாக நான் சந்திக்கும்போது, ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற இந்திப்படத்தின் ட்ரெய்லரை மட்டும் எனக்கு காட்டினார். அதைப் பார்த்தவுடனே, “இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை என்னிடம் கொடுங்கள், நான் தயாரிக்கிறேன்” என்று சொன்னேன். அதற்குப் பிறகுதான் முழு படமும் பார்த்தேன்.

இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இப்படத்தில் இருக்கிறது. படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆள் ஆவதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். குழந்தைகளும், ‘பெற்றோர்கள் நமக்கு ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்’ என்கிற வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தையும் சொல்லியிருக்கிறோம். நான் இந்த படத்தை தயாரித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

அமலா பாலின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும். அவருடைய சிறந்த நடிப்பை நீங்கள் இப்படத்தில் காணலாம். இதைத் தாண்டி, இதற்கும்மேல் அவர் பண்ணுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரைக்கும் அவர் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. அடுத்த வருடம் அனைத்து விருதுகளையும் அவர் வாங்குவார். இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் இளையராஜா சாரின் இசை” என்று தெரிவித்தார்.