சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா மீது செருப்பு வீச்சு: இளைஞர் கைது!

மர்மமான முறையில் மரணம் அடைந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் மீது செருப்பு வீசிய இளைஞர் சாலமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தை ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக் குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.

முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பை வீசினார். செருப்பு அமைச்சர் மீது விழவில்லை, எனினும் அந்த இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாலமனை விடுவிக்க வேண்டும் என்று கோரி முத்துகிருஷ்ணனின் வீட்டின் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.