பூமர் அங்கிள் – விமர்சனம்

நடிப்பு: யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், சேஷு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு மற்றும் பலர்

இயக்கம்: ஸ்வதீஷ் எம்.எஸ்

ஒளிப்பதிவு: சுபாஷ் தண்டபாணி

படத்தொகுப்பு: இளையராஜா.எஸ்

இசை: சாந்தன் & தர்ம பிரகாஷ்

தயாரிப்பு: ’அங்கா மீடியா’

வெளியீடு: ‘ஏவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்’ எஸ்.எஸ்.பிரபு

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

பணம் கொடுத்து படம் பார்க்க வருகிறவர்களை பொழுதுபோக்காக எவ்வளவு சிரிக்க வைக்க முடியுமோ அவ்வளவு சிரிக்க வைக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன், காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘பூமர் அங்கிள்’. அந்த லட்சியத்தை இந்த படம் எந்த அளவு எட்டிப் பிடித்திருக்கிறது? பார்க்கலாம்…

0a1b

நாயகன் நேசம் (யோகி பாபு), ‘எமி’ என்ற கதைப்பெயர் கொண்ட தன் ரஷ்ய நாட்டு வெள்ளைக்கார மனைவியை விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அவரது பிடிவாதமான முடிவை ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கிறார் மனைவி எமி, அதாவது, நேசம் தனது சொந்த ஊரில் உள்ள தனது சொந்த அரண்மனைக்கு தன்னை அழைத்துச் சென்று ஒருநாள் தங்க வேண்டும். இது நடந்தால் உடனே நான் விவாகரத்துக்கு உடன்படுவேன் என்கிறார் எமி. எதற்காக இப்படியொரு நிபந்தனை என்பது புரியாத நேசம், எப்படியோ… தனக்கு விவாகரத்து கிடைத்தால் சரி… என்ற எண்ணத்தில், ‘அரண்மனையின் மேல்தளத்துக்கு மட்டும் செல்லக் கூடாது’ என்ற பதில் நிபந்தனை விதித்து, எமியை தன் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.

நேசம், சிறுவயதில் தங்களை பெரியவர்களிடம் போட்டுக்கொடுத்து, பெயரை டேமேஜ் செய்ததால் திருமணமே செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவரது பழைய நண்பர்களான தாவூத் (சேஷு), பில்லா (பாலா), வல்லரசு (தங்கதுரை) ஆகியோர் நேசத்தை பழிவாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சொந்த ஊரில் தயாராக இருக்கிறார்கள். அதுபோல் அந்த ஊர் நாட்டாமையும் (ரோபோ சங்கர்) நேசத்தைக் கொலை செய்யும் முடிவுடன் காத்திருக்கிறார்.

நேசம் தன் மனைவி எமியுடன் அரண்மனைக்கு வந்தவுடன் உள்ளே நுழையும் பழைய நண்பர்களும், நாட்டாமையும் தத்தமது எண்ணங்களை நிறைவேற்ற ஒளிந்து ஒளிந்து முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையே, அரண்மனையின் மேல்தளத்துக்கு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறும் எமி, மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றுக்குள் நுழைய அடிக்கடி முயற்சி செய்கிறார். இதனால், தன்னை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எமி நிபந்தனை விதித்ததில் ஒரு உள்நோக்கம் – ஒரு சதித்திட்டம் – இருப்பதை நேசம் உணரத் தொடங்குகிறார்.

எமி ஏற்படுத்தும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குள் நேசம் தள்ளப்படுகிறார். அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வந்த பழைய நண்பர்கள், அவரது அபாயகரமான நிலையைப் பார்த்து மனமிரங்கி, பழிவாங்கும் எண்ணத்தைக்  கைவிட்டு அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.

அரண்மனைக்கு வந்திருக்கும் எமியின் உள்நோக்கம் – உண்மையான நோக்கம் – என்ன? அவர் செய்யும் சதிச்செயல்கள் என்ன? அவற்றை நேசம் எப்படி முறியடிக்கிறார்? என்பது ‘பூமர் அங்கிள்’ திரைப்படத்தின் கலகலப்பான மீதிக்கதை.

கதையின் நாயகன் நேசமாக யோகி பாபு நடித்திருக்கிறார். வழக்கம் போல் வெடுக் வெடுக் என படம் முழுக்க கவுண்ட்டர் வசனம் பேசி சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் அதுவே ஓவர் டோஸாக இருக்கிறது.

நாயகனின் மனைவி எமியாக வரும் வெள்ளைக்கார நடிகை ரொம்ப சீரியஸாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் தன் பங்குக்கு சிரிக்கவும் வைக்கிறார்.

நாயகனின் பழைய நண்பர்களான தாவூத், பில்லா, வல்லரசு ஆகியோரின் பாத்திரங்களில் வரும் சேஷு, பாலா, தங்கதுரை ஆகியோரும், நாட்டாமையாக வரும் ரோபோ சங்கரும் தத்தமது டிரேட் மார்க் காமெடிகளை படம் முழுக்க வாரி வழங்கி சிரிக்க வைக்கிறார்கள்.

திடீரென கதைக்குள் கொஞ்சம் கிளாமராக வரும் ஓவியா, கதைக்கு ஊறு விளைவிக்காமல், பாட்டுக்கு ஆடி, அதிரடி ஆக்‌ஷன் காட்டி ரசிகர்களை மகிழ்வித்துவிட்டு,மாயமாய் மறைந்து விடுகிறார்.

லாஜிக் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படத்தின் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களும் கண்டுகளிக்கக் கூடிய படமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். எனினும், சிரிக்க வைக்கும் காமெடிகளை இன்னும் சற்று அதிகமாகவே தூவியிருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவும், சாந்தன் – தர்மபிரகாஷ் இசையமைப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘பூமர் அங்கிள்’ – எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், பார்த்து சிரித்து மகிழ்ந்து வரலாம்!