புரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோம் என்றே தோன்றுகிறது!

அது ஒரு ஆவணப்படமென்று நினைக்கிறேன்.. அதில் ஒரு காட்சி வரும். பெருந்திரளான மக்கள் திரளோடு பி.ஜெ.பி.யின் வெற்றி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும். அக்கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களும் சிறுவர்களும் இடம்பெற்றிருப்பார்கள். மோடியையும் பி.ஜே.பியையும் வாழ்த்தும் கோசங்களைவிட முஸ்லிம்களை இழிவுபடுத்தும் கோசங்களே அதிகமாக இருக்கும்.

“அடே மியாக்களே…!! உங்கள் அம்மாவையும் சகோதரியையும் நாங்க …..க்கப்போறோம்…”

கிட்டத்தட்ட அந்தக்கும்பலில் அனைவருமே ஒருமுறையாவது இந்த வார்த்தைகளைச் சொல்லாதவர் எவரேனுமிருந்தால் ஆச்சர்யம்தான். நாராசமான கோசங்களோடு சாலைகளை ஸ்தம்பிக்கச் செய்யும்படியான மிகப்பெரிய ஊர்வலம் அது.. கைகளிலும் வாகனங்களிலும் தாமரைக் கொடிகள் மட்டுமின்றி பல்வேறு பெயர்களைக் கொண்ட அமைப்புகளின் முக்கோண வடிவக் காவிக்கொடிகளும் இருந்தன. திரும்பிய இடமெல்லாம் பெரியதும் சிறியதுமாய் மோடியின் புகைப்படங்கள்..

இந்த பிரம்மாண்டமான ஊர்வலத்தை சாலையோரத்திலும், தத்தமது வீடுகளின் மாடியிலும் நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் மாடியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களின் மத்தியில், ஒரு முஸ்லிம் சிறுவனும் இருந்தான். அவனும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு பத்து பதினொன்று வயதிருக்கலாம். மோடி குறித்தோ, அரசியல் குறித்தோ அவனுக்கு எதாவது தெரிந்திருக்க முகாந்திரமே இல்லை.

என்ன நினைத்தார்களோ.. திடீரென்று அந்தப்பெண்களில் ஒருத்தி அவனைப் பிடித்து மாடியிலிருந்து கீழே தள்ளி விடுகிறாள். கீழே விழுந்த சிறுவன் வலியில் துடிக்கிறான். யாருமே அவனை நெருங்கவில்லை. அதே மாடியிலிருந்து அவனது பெற்றோர் பதறியடித்து ஓடிவந்து இரத்தம் சிந்திக்கிடக்கும் மகனைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள்.. அநேகமாய் மருத்துவமனைக்காக இருக்கலாம்..

“குஜராத் என்பது ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்” என்பார் குல்தீப் நய்யீர். இஸ்லாமிய வெறுப்புக் கண்ணோட்டம் ஒவ்வொரு குஜராத்தியிடமும் எப்படி சித்தாந்தமயமாக்கப்பட்டு பாசிசத்தன்மை அடைந்ததோ, அதே போன்ற நிலைமைதான் இன்றைய உ.பி யிலும் விஷம் போலப் பரவிக்கொண்டிருக்கிறது.

ஓடும் இரயில் ஒரு இஸ்லாமியப்பெண்ணை வன்புணர்வு செய்யப்பட்டுள்ள செய்தி ஏதோ ஒரு காமுகனின் செயலென்று புறந்தள்ளிவிட முடியாது. விதைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிவந்து விடுகிறது..

2002 இல் கோத்ரா இரயில் நிலையத்தில் நின்றிருந்த முஸ்லிம் பெண்ணை வலுக்கட்டாயமாக கரசேவகர்கள் S6 பெட்டிக்குள் தூக்கிச் சென்றதன் மூலமே அப்பகுதி முஸ்லிம் வியாபாரிகளைத் திட்டமிட்டு தூண்டினார்கள். கோபமடைந்த முஸ்லிம் கும்பல் கல்லெறிந்தனர். பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டது.. பழி முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டது.. 3000 முஸ்லிம் பிணங்களின் மீது குஜராத் மாடல் அறங்கேறியது.. இப்போது உ.பி இன்னொரு குஜராத்தாக வளர்ந்து வருகிறது…

புரட்சியோ, பேரழிவோ, நம் ஆயுளுக்குள்ளேயே பார்த்து விடுவோமென்றே தோன்றுகிறது…

SAMSU DEEN HEERA