“தனித்துவமாக போராடி நின்று ஜெயித்தவர் ஜெயலலிதா”: பாரதிராஜா புகழஞ்சலி!

ராஜாஜி அரங்கத்துக்கு நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோடிக்கணக்கான தமிழக மக்களின் இதயத்தில் அழுத்தமாக பதிந்த ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

உலக வரலாற்றில் ஆளுமை சக்தி படைத்த எவ்வளவோ பெண்மணிகள் கதைகள் படித்திருப்போம், வரலாறு படித்திருப்போம். இவர் வரலாற்றில் பதிக்கக்கூடிய ஆளுமை நிறைந்த ஒரு பெண் என சொல்லலாம்.

மிகச் சிறந்த செயலாற்றி இருக்கிறார் ஜெயலலிதா. தனித்துவமாக போராடி நின்று ஜெயித்து மகிழ்ந்திருக்கிறார். வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒரு பெண் சிங்கம் என்று சொல்லலாம்.

மிகச் சிறந்த தலைவியை, கலை அரசியை, ஒரு மேதையை தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வதற்கு இடமில்லை” என்றார் பாரதிராஜா.