பிரமாண்டமான ‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுகிறது புதிய நிறுவனம்!

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’  வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள ‘பாகுபலி–2’ படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.

‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவது மட்டுமல்லாது ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிப்பில் உருவாகும் ‘மடை திறந்து’ என்ற படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை சத்யசிவா இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழில் ‘மடைதிறந்து’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘1945’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.