பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கு பதில்  இஸ்லாமியர்கள் புதிதாக மசூதி கட்டிக்கொள்ள, அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச வழக்காடு மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச வழக்காடு மன்ற தலைமை நடுவர் ரஞ்சன் கோகோய், நடுவர்கள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஏகமனதாக வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

* அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட ஒன்றிய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

* இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.

* தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்

* சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் வழக்காடு மன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.

* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

* 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை.

* தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.

* காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.

* அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

* அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.

* பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.

* ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.

* நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.