”ஜெயா சிகிச்சை விவகாரத்தில் சசிகலா உட்பட 4 பேர் குற்றம் செய்தவர்கள்”: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2022/10/0a1a-25.jpg)
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத் துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 செப்.22-ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் கிளப்பப்பட்ட நிலையில், இது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2017 செப்டம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டார்.
சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மகாலில் ஆணைய அலுவலகம் அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள்ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக்,ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்இல்லத்தில் பணியாற்றிய சமையலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள், தொழில்நுட்பு நிபுணர்கள் உட்பட 151 சாட்சிகள் மற்றும் பிரமாண பத்திரம் அளித்த 8 பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை முடிந்த நிலையில், ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விசாரணை அறிக்கையை வழங்கினார். சமீபத்தில் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில், ஆணையத்தின் 608 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
தெஹல்காவில் சதித் திட்டம் வெளியானதன் விளைவாக, ஜெயலலிதா கடந்த 2011 நவம்பரில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சசிகலாவை வெளியேற்றினார். சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இளவரசி உள்ளிட்டோர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சசிகலாவின் உறவினரான கிருஷ்ணபிரியா அளித்த சாட்சியத்தின்படி, சசிகலா – ஜெயலலிதா இடையே நல்லுறவு இல்லை. ஜெயலலிதா தன்னுடன் பேசியதில்லை என இளவரசி கூறுகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சசிகலா உறவினர்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
ஜெயலலிதாவின் இதயத்தில்‘வெஜிடேஷன்’, ‘பெர்ஃபோரேஷன்’ கண்டறியப்பட்டன. இதற்காக இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், அமெரிக்காவில் இருந்து அப்போலோவுக்கு வந்த சமின் சர்மா ஆகியோர் ஆஞ்சியோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தயார் என்று ரிச்சர்ட் பீலே கூறினார். சமின் சர்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனாலும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சுவரை அது ஏன் நடக்கவில்லை?.
சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுவதை தவிர, அப்போலோ மருத்துவமனையால் வேறு ஆதாரங்களோ, ஆவணங்களோ வைக்கப்படவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றம் சாட்டுவதைதவிர, ஆணையம் வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
மருத்துவர் ஒய்விசி ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மும்பை, இங்கிலாந்து, அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ செய்வதற்கான கருத்தை பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.