அமலாபாலுடன் விவாகரத்தா?: இயக்குனர் விஜய் பதில்!

இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் தம்பதியர் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டதற்கு இயக்குநர் விஜய் பதில் அளித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபாலும், தமிழகத்தின் செட்டிநாட்டை சேர்ந்த இயக்குனர் விஜய்யும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது “செட்டிநாட்டு மருமகள்” என்றுகூட சில ஊடகங்களால் கொண்டாடப்பட்டார் அமலாபால்.

திருமணத்துக்குப்பின் சிறிது காலம் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அமலாபால் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பது உள்ளிட்ட சில போக்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காரணமாக, அவருக்கும், கணவர் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இருவரும் பிரிந்து, தனித்தனியே வசித்து வருகிறார்கள். சமீப நாட்களாக பொதுநிகழ்ச்சிகளில் கூட இருவரும் சேர்ந்து கலந்து கொள்வதில்லை.

இந்நிலையில், இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிடுவது என முடிவெடுத்து விட்டதாகவும், பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்காக இரு தரப்பும் வழக்கறிஞர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விவாகரத்து குறித்து இருவரும் ஓரிரு வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாயின.

அமலாபாலை விவாகரத்து செய்யப்போவது உண்மையா? என்று இயக்குனர் விஜய்யிடம் ஒரு பேட்டியின்போது கேட்டதற்கு, “இது பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று விஜய் கூறியுள்ளார்..