பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு எதிரொலி: சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. விளைவாக, சர்ச்சை கருத்து குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே,  சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது” என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால், ஏற்கனவே கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமானுக்கு எதிராக பதிவான வழக்கில், வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.