பிரபல நடிகை கல்பனா காலமானார்

பிரபல திரைப்பட நடிகை கல்பனா திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாக இருந்து வருகிறார்கள்.

பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த் ஆகியோருடன் இணைந்து ‘சதிலீலாவதி’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தமிழில் அவருடைய நடிப்பில் வெளியான கடைசி படமாக ‘காக்கி சட்டை’ அமைந்துவிட்டது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது, கல்பனா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

கல்பனாவின் திடீர் மறைவால் தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கல்பனாவுடன் நடித்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கல்களை பதிவு செய்துவருகிறார்கள்.