கமல்ஹாசன் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை; விமர்சிக்கவும் இல்லை: கவுதமி விளக்கம்!

மலையாளத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, தமிழில் வெளியான ‘இருவர்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மோகன்லாலுடன் கவுதமி நடித்திருக்கும் படம் ‘நமது’. இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் வெளியாகிறது.

இதனையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் கவுதமி. அப்போது அவர் கூறியதாவது:

இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்புகொண்டு, கதை சொல்ல வேண்டும் என்றார். அவர் ஆந்திரா முழுவதும் பிரபலம். அவர் இயக்கிய ‘அய்த்தே’ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது  அவர் மீது எல்லோருக்கும் மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்க சம்மதித்தேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அது மாதிரியான கதாபாத்திரத்தை இயக்குனர் சொன்னதால், நடிக்க ஒப்புக்கொண்டேன்.

‘பாபநாசம் படத்தை பார்த்துதான் என்னை நடிக்க கேட்கிறீர்களா?’ என்று நான் கேட்டேன். ஆனால், ‘நான் ‘பாபநாசம்’ படம் பார்க்கவில்லை இந்த கதையை நான் இரண்டு வருடங்களாக எழுதுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் தான் நன்றாக இருக்கும்’ என்று சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது.

படப்பிடிப்பு நடைபெற்றபோது. யாருக்கும் சலிப்பு வராத மாதிரி இயக்குனர் படப்பிடிப்பை நடத்தியதால் படம் நல்ல படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக் கூடிய வன்முறை இல்லாத படம்.  இன்றைய ‘நமது’ தலைமுறையினர் பார்க்கவேண்டிய படமாகவும் இது இருக்கும்.

நான்கு கதாபாத்திரங்களைச் சுற்றி ஒரு கதை.  நால்வரும் சந்திக்கும்போது. படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி கோரப்பட்டி, இயக்குனர் சந்திர சேகர் ஏலட்டி இருவரும் இந்த படத்தை ஆகஸ்டு 5ஆம் தேதி ஒரே நாளில் மூன்று மொழிகளில் வெளியிடுவது பெரிய விஷயம். நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் எனது சொந்த குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்.

இவ்வாறு கவுதமி கூறினார்.

“தொடர்ந்து நடிப்பீர்களா?” என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக! எனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள், நல்ல டீம் வந்தால் நடிப்பேன். நான் பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும், சினிமாவை விட்டு எங்கும் போகவில்லை. அது என் ரத்ததிலேயே ஊறியது” என்றார் கவுதமி.

“கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டபோது, குணமாகிக்கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது” என்றார்.

“கபாலி’ படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் எழுதியதாக ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறதே” என்று கேட்டதற்கு, “காலில் அடிபட்டு படுத்திருக்கிற அவரால் எப்படி படம் பார்க்க முடியும்? அது தவறான செய்தி. அவர் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை. விமர்சனம் எழுதவும் இல்லை” என்றார்.

“உங்கள் மகளை எந்த துறையில் ஈடுபடுத்த எண்ணம்?” என்று கேட்டதற்கு, “கலைத்துறை தான் அவுங்களுக்கும் விருப்பம். இதில் எந்த துறை அவுங்களுக்கு பிடிக்கிறதோ அதில் ஈடுபடுவார்” என்றார் கவுதமி.