ஜீவா – காஜல் அகர்வால் படத்தை இணையத்தில் கசியவிட்ட திரையரங்க மேலாளர் கைது!

ஜீவா – காஜல் அகர்வால் நடிப்பில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் எல்ரெட்  குமார் தயாரிப்பில்,  டீகே  இயக்கிய ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெளியானது.

“படுமொக்கை” என்று ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த படம், திரைக்கு வந்த அடுத்த நாளே Tamil Rockers.com, Tamil Yogi.com  போன்ற இணையதளங்களில் கசிந்தது.

இந்த கசிவு எங்கிருந்து ஆரம்பமானது என்பதை தற்போது கண்டுபிடித்து, சம்பந்தபட்ட திரையரங்கின் மேலாளர் மற்றும் ஆபரேட்டரை கைது செய்ய வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

“எங்கள் கவலை வேண்டாம்’ படத்தை நாங்கள் ‘கியூப் சினிமா நெட்வர்க்’கில் பதிவு செய்து இருக்கிறோம். அவர்களின் உதவியால் தான் இதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அரக்கோணத்தில் இருக்கும் ஸ்ரீதேவி திரையரங்கத்தின் மீது நாங்கள் புகார் அளித்து இருக்கிறோம். இந்த திரையரங்கில் இருந்து தான் எங்களின் திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது. போலீசார் தற்போது இந்த திரையரங்கத்தின் மேலாளர், ஆபரேட்டர் ஆகியோரை கைது செய்து இருக்கின்றனர்” என்றார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.