தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஆண்டவன் கட்டளை’!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஆண்டவன் கட்டளை’. இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நாளை (23-ம் தேதி)  உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். தமிழகத்தில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது.

ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ‘புலி’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘சண்டிவீரன்’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை வெளியிட்ட இந்நிறுவனம், அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்காதே’ படத்தையும் இது தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.