டிசி – விமர்சனம்

நடிப்பு: லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா ஏ.கே, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயாள், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பாலாஜி தேவிபிரசாத் மற்றும் பலர்

கதை, திரைக்கதை & இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

கூடுதல் திரைக்கதை: அருண் ரஞ்சன்

வசனம்: அருண் மாதேஸ்வரன், ஃபிராங்க்ளின் ஜேக்கப்

ஒளிப்பதிவு: முகேஷ் ஜி

படத்தொகுப்பு: ஜி.கே.பிரசன்னா

இசை: அனிருத்

கலை இயக்கம்: கண்ணன் எஸ்

சண்டை பயிற்சி: பி.சி.ஸ்டண்ட்ஸ்

தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

முதலில் தலைப்புக்கான விளக்கம்: இப்படத்தின் நாயகன் பெயர் தேவதாஸ்; நாயகி பெயர் சந்திரா. Devadas என்பதில் உள்ள முதல் எழுத்தையும், Chandra என்பதில் உள்ள முதல் எழுத்தையும் இணைத்து, ‘டிசி (DC) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இனி படக்கதை சுருக்கம்: சிறையிலிருந்து தப்பிவந்து, அரசு (தலைவாசல் விஜய்) என்ற தாதாவோடு கூட்டணி அமைத்திருக்கும் நாயகன் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), தாதா அரசு குழுவினருடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். காவல் துறையினரைத் தாக்கி, அவர்களது துப்பாக்கிகளைக் கொள்ளையடித்துக் கடத்துகிறார். இது பரபரப்பூட்டும் பெரிய விஷயமாக மாறுகிறது.

மறுபுறம், ரூ.7லட்சம் பணத்தை அபகரிக்க ஆசைப்பட்டு ஒரு காவல் துறை அதிகாரி அப்பாவி ஒருவரைக் கொலை செய்துவிடுகிறார். ஏற்கனவே காவல் துறையின் தேடுதல் பட்டியலில் இருக்கும் தேவதாஸ், மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பத்தினருக்காக அந்த காவல் துறை அதிகாரியைக் கொலை செய்கிறார்.

இத்தகைய தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடையும் காவல் துறை அதிகாரி போஜ்ராஜ் (கிரிஷ் தயாள்) தலைமையிலான காவல் படை, தேவதாஸ் அண்ட் கோ-வைத் தீர்த்துக் கட்ட அவர்களை வலைவீசித் தேடுகிறது.

காவல் படையினரிடம் சிக்காமல் இருக்க, தேவதாஸும், அவரது நண்பர்களும் விடுதி ஒன்றில் தலைமறைவாக தங்கியிருக்கிறார்கள். அங்குள்ள பாரில் பாடல்கள் பாடும் பாடகி பார்வதியை (சஞ்சனா ஏ.கே) தேவதாஸ் தற்செயலாக சந்திக்கிறார். இருவருக்குள்ளும் ஈர்ப்பு அரும்பத் தொடங்கிய நிலையில், துப்புக் கிடைத்து அங்கு வரும் காவல் படை, தேவதாஸ் அண்ட் கோ மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது. இத்தாக்குதலில் காவல் படை தேவதாஸை பிடிப்பது மட்டுமல்லாமல், அவரது நேசத்துக்குரிய பாடகி பார்வதியையும் சுட்டு வீழ்த்துகிறது. குண்டடி பட்டு உயிருக்குப் போராடும் பார்வதியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் காப்பாற்றி விடலாம் என்ற நிலையில், இரக்கமே இல்லாத காவல் துறை அதிகாரி அதைச் செய்யாமல், மீண்டும் துப்பாக்கியால் சுட்டு, எந்த பாவமும் அறியாத பார்வதியைக் கொன்று விடுகிறார். கைது செய்யப்பட்ட தேவதாஸ், காவல் படையின் போலி என்கவுண்டரில் இருந்து தப்பிக்கிறார்.

பாடகி பார்வதி பரிதாபமாக உயிரிழந்ததற்கு தான் தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியோடு இருக்கும் தேவதாஸ், பின்னர் பாலியல் விடுதி ஒன்றில் பாலியல் தொழிலாளி சந்திராவை (வாமிகா கபி) சந்திக்கிறார். ஆறு வயது முதல் வெளியுலகத்தையே பார்க்காமல், அந்த விடுதிக்குள் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் சந்திராவின் பரிதாப நிலை கண்டு மனமிரங்கும் தேவதாஸ், அந்த விடுதியின் பொறுப்பாளரையும், அவரது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, சந்திராவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

இப்படி தேவதாஸுடன் வெளியே வந்த சந்திரா, தன் வாழ்க்கையைச் சீரழித்து படுகுழிக்குள் தள்ளிய மருத்துவரை தேடிச்சென்று, துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார். இதனால், தேவதாஸ் அண்ட் கோ-வுடன் சந்திராவையும் சேர்த்து வேட்டையாட காவல் படை துரத்துகிறது. அவர்களுடன் மோதலில் ஈடுபட்டவாறு தப்பியோடுகிறது தேவதாஸ் + சந்திரா அண்ட் கோ.

இறுதியில் என்ன நடந்தது? தேவதாஸும் சந்திராவும் காவல் படையிடம் சிக்கினார்களா? அல்லது நிரந்தரமாய் தப்பித்து காதலுடன் கரம் பிடித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு ஆயுத மோதலுடன் கூடிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சதைகள் கிழியக் கிழிய… ரத்தம் பெருக்கெடுத்து ஓட… விறுவிறுப்பாய் விடை அளிக்கிறது ‘டிசி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நடிப்பு எப்படி: கதையின் நாயகன் தேவதாஸாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். அவர் ஒரு படத்தின் முழுமையான ஹீரோவாக அறிமுகமாவது இது தான் முதல் முறை என்றாலும், அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகர் போல், அலட்டிக் கொள்ளாமல் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அடர்ந்த தாடி, மீசை, தலைமுடியுடனும், எந்நேரமும் ரத்தம் சிதறிய முகத்துடனும் வெளிப்பார்வைக்கு கொடூர தோற்றம் கொண்டவராக… அதே நேரத்தில் உள்ளுக்குள் பூ போன்ற மென்மையான உள்ளம் கொண்டவராக… வடிவமைக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் சேர்க்கும் வகையில் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கு மற்றுமொரு சிறந்த ஆக்‌ஷன் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வாழ்த்துகள் லோகேஷ் கனகராஜ்!

நாயகி சந்திராவாக வாமிகா கபி நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். மிகவும் சவாலான கதாபாத்திரத்தை துணிச்சலாக ஏற்று, கவனமாகவும் கண்ணியமாகவும் நடித்து சபாஷ் பெறுகிறார். ஆரம்பத்தில் விரக்தி மனநிலை கொண்ட பாலியல் தொழிலாளியாக வருபவர், தேவதாஸுடன் சேர்ந்தபின் இரண்டு கைகளிலும் இரண்டு கைத்துப்பாக்கிகள் ஏந்தி காவல் படையினரை நிர்மூலமாக்கும் போர்குணம் கொண்டவராக ஜொலித்திருக்கிறார். கீப் இட் அப்!

பாடகி பார்வதியாக சஞ்சனா ஏ.கே நடித்திருக்கிறார். ’ரா’வான இந்த படத்தில் சஞ்சனா வரும் காட்சிகள் மனதுக்கு இதமளிக்கின்றன. அதற்கேற்ப அவர் மென்மையான நடிப்பை அழகாக வழங்கியிருக்கிறார். படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் அவர், இன்னும் சில காட்சிகள் வர மாட்டாரா? என்று ஏங்க வைக்கிறார்.

தேவதாஸின் தந்தை மோட்டார் மணியாக வரும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும், தாதா அரசுவாக வரும் தலைவாசல் விஜய்யும் அனுபவம் வாய்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

தேவதாஸ் குழுவைச் சேர்ந்த கிட்டியாக வரும் அவினாஷ் ரகுதேவன், கருப்பனாக வரும் ஜவஹர் சக்தி, இவர்களது வாகனத்தின் ஓட்டுநர் சுன்னிலாலாக வரும் ஷரத் ரவி, காவல் படையின் தலைவர் போஜ்ராஜாக வரும் கிரிஷ் தயாள், அஷ்ரப் என்ற மற்றொரு காவல் துறை அதிகாரியாக வரும் பாலாஜி தேவிபிரசாத் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பங்களின் தரம்: சரத் சந்திர சட்டோபாத்யாய் என்ற பிரபல வங்காள எழுத்தாளர் எழுதி 1917-ல் வெளிவந்த பிரசித்தி பெற்ற நாவல் ‘தேவதாஸ்’. பிற்காலத்தில் அது பல மொழிகளில் திரைப்பட வடிவமும் பெற்றது. (தமிழில் கூட நாகேஸ்வரராவ் – சாவித்திரி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற “ஓ… தேவதாஸ்…”, “எல்லாம் மாயை தானா…”, “உலகே மாயம்…” உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் தேவாமிர்தமாய் இருக்கும். சாகாவரம் பெற்றவை.)

அன்றைய ‘தேவதாஸ்’ கதையிலிருந்து தேவதாஸ், சந்திரா, பார்வதி ஆகிய பிரதான கதாபாத்திரங்களைக் கையிலெடுத்து, அவற்றின் காலநிலையையும், சமூகச் சூழலையும், வாழ்க்கைப் போக்கையும் தனது பாணிக்கும் கற்பனைக்கும் ஏற்ப மாற்றியமைத்து, அதனுள் கேங்ஸ்டர் குழுவுக்கும், காவல் படைக்கும் இடையிலான ஆக்ரோஷமான மோதல்களை உட்புகுத்தி இந்த ‘டிசி’ படத்துக்கான கதை, திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதி, விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துக்கொள்ளும் இயக்குநர், அவர்களை படம் முடிகிற வரை சீட் நுனியிலேயே அமர்ந்து, ஆவலுடன் பார்க்க வைத்திருப்பது பாராட்டுக்கு உரியது. ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் படத்தில் ரொம்பவே தூக்கலாக இருப்பது ஒரு குறை; என்ற போதிலும் அவற்றை நியாயப்படுத்தும் வகையில் கதை பின்னப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், அருண் மாதேஸ்வரன், ஃபிராங்க்ளின் ஜேக்கப் ஆகியோரின் வசனங்கள் செம கூர்மை. பாராட்டுகள்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பாடலிசையும், பின்னணி இசையும் இப்படத்துக்கு மிகப் பெரிய பலம். பிரித்து மேய்ந்திருக்கிறார்.

அனிருத்துக்கு அடுத்தபடியாக இப்படத்துக்கு மற்றொரு பலம் – பி.சி. ஸ்டண்ட்ஸின் சண்டைப் பயிற்சி. மின்னல்களின் தடாலடி மோதல்களைப் போல் துப்பாக்கிச் சண்டைகளை வடிவமைத்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி, காட்சிகளை மட்டுமின்றி, கதாபாத்திரங்களின் துல்லிய உணர்வுகளையும் தன் கேமரா மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே தனது ஷார்ப் கட்டிங் மூலம் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

மொத்தத்தில்: ’டிசி’ – அதிரடி ஆக்‌ஷன் பிரியர்களுக்கு அட்டகாசமான விருந்து; பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 4/5