ஜனநாயகன் – விமர்சனம்

நடிப்பு: ச.ஜோசப் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியா மணி, நரேன், நாசர், சுனில், மோனிஷா பிளஸ்ஸி, பாபா பாஸ்கர், டீஜே அருணாசலம், நிழல்கள் ரவி, ரேவதி, ஏ.ஸ்ரீநாத், ரெய்ச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், ஜி.எம்.சுந்தர், ஷரத் ரவி, அர்ஷத், பேபி லிதன்யா மற்றும் பலர்

திரைக்கதை, இயக்கம்: ஹெச்.வினோத்

கதை: அனில் ரவிபுடி

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

கலை இயக்கம்: செல்வகுமார்

ஸ்டண்ட் இயக்கம்: அனல் அரசு

தயாரிப்பு: ‘கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ்’ வெங்கட் கே நாராயணா

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

போலீஸ் துணை கமிஷனர் அம்ரிஷ் பூஜாரி (பாபி தியோல்) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் நாயகனும் இளைஞனுமான தளபதி வெற்றி கொண்டான் (விஜய்). அந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும்புள்ளியை தப்பிக்க வைப்பதற்காக, அவரது ஆட்கள் சிறையில் போலியாக ஒரு கலவரத்தை நடத்த முயலுகிறார்கள். அவர்களது முயற்சியை நாயகன் வெற்றி அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி முறியடிக்கிறார். இதனால் சிறை அதிகாரி ஸ்ரீகாந்துக்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) வெற்றி மீது நல்ல மதிப்பும், நட்பும் உண்டாகிறது.

மனைவியை இழந்த சிறை அதிகாரி ஸ்ரீகாந்துக்கு விஜயலட்சுமி என்ற விஜி (பேபி லிதன்யா) என்ற மகள் இருக்கிறார். அச்சிறுமி ‘சூப்பர் மேன்’ என்று வெற்றியை செல்லமாக அழைக்க, இருவரும் பரஸ்பரம் பிரியமாக இருக்கிறார்கள்.

மலை கிராமத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் பழங்குடிப் பெண்மணியான வெற்றியின் அம்மா (ரேவதி), சிறையில் உள்ள தன் மகனை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதை அறிந்த ஸ்ரீகாந்த், சிறை விதிகளை மீறி வெற்றியை அவரது மலை கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மெல்ல கண் திறந்து வெற்றியைப் பார்க்கும் அவரது அம்மா, தன் கடைசி ஆசை நிறைவேறிய திருப்தியில் மரணம் அடைகிறார். சிறைக்குத் திரும்பிய பின்னர், விதிகளை மீறிய குற்றத்துக்காக ஸ்ரீகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து வெற்றி வேதனைப்படுகிறார்.

மகள் விஜியை தைரியமான ராணுவ அதிகாரி ஆக்க வேண்டும் என்பது அவரது அப்பா ஸ்ரீகாந்தின் கனவு. இந்நிலையில், எதிர்பாராத கோர விபத்தில் சிக்கி, படுகாயம் அடையும் ஸ்ரீகாந்த், உயிருக்கு ஆபத்தான கண்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் தன் மகள் விஜியை வளர்த்து ராணுவ அதிகாரி ஆக்கும் பொறுப்பை வெற்றியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துபோகிறார்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. வெற்றியின் அன்பிலும், பாதுகாப்பிலும் விஜி வளர்ந்து பருவப் பெண் (மமிதா பைஜூ) ஆகிறார். அவர், முடி நரைத்த வெற்றியை இப்போதெல்லாம் ‘சித்தா’ (’சித்தப்பா’ என்பதன் சுருக்கம்) என்று செல்லமாக அழைக்கிறார்.

ராணுவ அதிகாரியாவதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பதற்காக, விஜியை உடற்பயிற்சிகள் செய்ய வற்புறுத்துகிறார் வெற்றி. ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாக ‘ஃபியர் ஃபோபியா’ என்ற பீதி கலந்த பயம் உண்டாக்கும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதால், விஜி உளவியல் ரீதியாக ராணுவ அதிகாரிக்குத் தேவையான தைரியத்தைப் பெற இயலவில்லை.

இதற்கிடையே, ஆயுதக் கடத்தல் தொழிலையும், நாசகார சிந்தனையையும் கொண்ட ஜான் ஹிம்லர் (பாபி தியோல்) என்ற வில்லன், ஆப்பிரிக்காவில் ஒற்றுமையாக வாழ்ந்த ஒரு நாட்டு மக்களிடையே சாதி – மத பேதங்களை உருவாக்கி, மிகப்பெரிய கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாட்டை சுடுகாடாக்கிவிட்டு, அது போன்ற நாசங்களை இந்தியாவில் – குறிப்பாக தமிழ்நாட்டில் – விளைவிக்கும் வெறியுடன், ஆயுதங்களை சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் கொண்டு வருகிறார். இந்நிலையில், தெரியாத்தனமாக நடந்த ஒரு சம்பவத்தால், ஜான் ஹிம்லரின் வெறுப்பை சம்பாதித்து விடுகிறார் விஜி. இதனால், விஜியை கொலை செய்யத் திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஜான் ஹிம்லர்.

ஆபத்திலிருக்கும் விஜியைக் காப்பாற்றத் துடிக்கும் வெற்றிக்கு, ஜான் ஹிம்லரின் பின்னணி தெரிய வருகிறது. வெற்றி எந்த போலீஸ் துணை கமிஷனர் அம்ரிஷ் பூஜாரியை கொலை செய்ததாக சிறையில் தண்டனை அனுபவித்தாரோ, அதே அம்ரிஷ் பூஜாரி தான் இப்போது ஜான் ஹிம்லர் என்ற பெயரில் வில்லனாகத் திரும்பி வந்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட அம்ரிஷ் பூஜாரி மாற்றுப் பெயரில் உயிருடன் வந்தது எப்படி? வெற்றிக்கும் அம்ரிஷ் பூஜாரிக்கும் இடையேயான முன்பகை என்ன? நாட்டை நாசமாக்கும் வில்லனின் சதித்திட்டத்தை வெற்றி முறியடித்தாரா? சாவின் விளிம்பிலிருந்த விஜியைக் காப்பாற்றினாரா? விஜிக்கு ‘ஃபியர் ஃபோபியா’ என்ற பீதி கலந்த பயம் உண்டாக்கும் உளவியல் சிக்கல் ஏற்பட காரணம் என்ன? அந்த உளவியல் சிக்கலிலிருந்து விஜியை மீட்டு, தைரியமான ராணுவ அதிகாரி ஆக்கி, அவரது அப்பாவின் கனவை வெற்றி நிறைவேற்றினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, தளபதி வெற்றி கொண்டானாக விஜய் நடித்திருக்கிறார். கைதி சீருடையில் சிறைக்கைதியாக, காக்கி சீருடையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக, சாதா உடையில் சாமானியராக மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பார்வையாளர்கள் சலித்துப்போகும் அளவுக்கு கொட்டிக் குவித்திருக்கும் எக்கச்சக்கமான சண்டைக் காட்சிகளில் கொஞ்சமும் அசராமல் வில்லன்களையும், ரவுடிகளையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார். வழக்கம் போல் முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்து, வழக்கம் போல் தப்பைத் தட்டிக் கேட்கும் ஹீரோவாக நடித்து, வழக்கம் போல் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் வளர்ப்பு மகள் விஜயலட்சுமி என்ற விஜியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சித்தப்பாவிடம் செல்லம் கொஞ்சுவது, அவரது அக்கறையைத் தவறாகப் புரிந்துகொண்டு முறுக்கிக் கொள்வது, பின்னர் திருந்தி, வருந்தி, திரும்பி வருவது, உளவியல் சிக்கலில் அவதிப்படுவது, இறுதியில் அதிரடி ஆக்‌ஷனில் தூள் பரத்துவது என்று அசத்தலாக நடித்திருக்கிறார்.

இருவேறு காலகட்டங்களில் இருவேறு பெயர்களில் வருகிறார் பாபி தியோல். போலீஸ் துணை கமிஷனர் அம்ரிஷ் பூஜாரியாக மிகவும் நல்லவராகவும், அவமானத்துக்கு ஆளாகையில் மனம் குமுறுகிறவராகவும் அருமையாக நடித்திருக்கிறார். நயவஞ்சகன் ஜான் ஹிம்லராக மாறியபின் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

மற்றொரு வில்லனாக, ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராக ரோஜா ரங்கசாமி என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். வில்லத்தனத்தோடு அரசியல் நையாண்டியையும் சேர்த்து செய்து கவனம் பெறுகிறார்.

நாயகி கயலாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கதையில் அவர் ஜர்னலிஸ்ட் என்று சொல்லப்பட்டாலும், எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் சம்பிரதாயத்துக்கு எப்போதாவது வந்து போகிறார்.

சிறை அதிகாரி ஸ்ரீகாந்தாக கௌதம் வாசுதேவ் மேனன், போலீஸ் அதிகாரியாக நிழல்கள் ரவி, நாயகனின் அம்மாவாக ரேவதி, ஷீலா தேவி ஐ.ஏ.எஸ்ஸாக பிரியாமணி, சிறுமி விஜியாக பேபி லிதன்யா, கலீலாக நரேன், அறிவுடை நம்பியாக நாசர், வேலுவாக சுனில், கார்த்திக்காக டீஜே அருணாசலம், மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி, பாபா பாஸ்கர், ரெய்ச்சல் ரெபேக்கா, கஜராஜ், முத்துகுமார் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

’பாலையா’ என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்குப்படத்தின் ரீமேக் ரைட்ஸை விலைக்கு வாங்கி, அதிகாரபூர்வமாக தமிழில் ‘ஜனநாயகன்’ திரைப்படமாக மறுஆக்கம் (ரீமேக்) செய்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘திரைக்கதை, இயக்கம் – ஹெச்.வினோத்’ என்று கார்டு போடுகிறார்கள். ஆனால் 3 மணி 3 நிமிடம் ஓடும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையிலோ, இயக்கத்திலோ, எங்கேயும் ஹெச்.வினோத் என்ற கிரியேட்டரைக் காணவே காணோம். ஒரே ஜல்லியடிப்பு!

அனிருத் இசை, சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, அனல் அரசுவின் ஸ்டண்ட் இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

‘ஜனநாயகன்’ – விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்! மற்றவர்களுக்கு…?

ரேட்டிங்: 3/5