ஆசிரியரிடமும் குழந்தைகளிடமும் அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கோர வேண்டும்!

YAMUNA RAJENDRAN பதிவு:

அமைச்சர் கீர்த்தனா தன்னளவில் திருத்தமாக ஆங்கிலம் பேசகிறாரா இல்லையா என்பது இரண்டாம் கட்டப் பிரச்சினை. இதனை மையமாக வைத்த விவாதிப்பதும் ஒரு வகை மேட்டிமை மனநிலைதான்.

ஆசிரியர் மீதோ அல்லது அந்த வகுப்புக் குழந்தைகள் சார்ந்தோ அமைச்சருக்கு விமர்சனம் இருக்குமானால் அதனை தனித்த அறையில் சம்பந்தப்பட்டவர்களை தனித்தனியே அழைத்துப் பேச வேண்டும். இது பற்றிய அறிக்கை ஒன்றை கல்வி மேம்பாடு கருதி அதனைக் கல்விதுறைக்குச் சமர்ப்பிக்கலாம். இன்ஸ்பெக்சன் குறித்த ஒழுக்கம்-அறம் இதுதான்.

இதை ஒளிப்பதிவு செய்து பொதுவெளியில் பரப்புவது துறைசார் ஒழுக்கம் அல்ல. இவரது இந்த ரீல் சம்பந்தபட்ட ஆசிரியர், மாணவி தொடர்பான ஒரு எதிர்மறை எண்ணத்தைப பொதுச் சமூகத்துக்குத் தருவது. அவர்களை பிறர்முன் மனம் கூசச் செய்வது.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்த நடவடிக்கையில் இருப்பது நெஞ்சார்ந்து கல்வியை மேம்படுத்தும் எண்ணம் அல்ல, மாறாக அதிகார துஸ்பிரயோகம்.

கடைசி பெஞ்ச் சொல்லின் அரசியலும் மேட்டிமையும் எவராலும் சகிக்கப்படக் கூடாது.

இது எல்லாவற்றையும் விட்டுவிட்டாலும் அவர் என்ன கல்வித்துறைசார் தணிக்கையாளரா அல்லது அத்துறைசார் அதிகாரியா? அமைச்சராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

இப்பிரச்சினையில் இவையெல்லாம்தான் விடைகாண வேண்டிய கேள்விகள்.

# # #

தாம் அனைத்தும் அறிந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கிற பூஜ்ய மனதினரிடம் அதிகாரம் சேரும்போது அவர்கள் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் நடத்தும் அபத்த நாடகம் அரங்கேறுகிறது. துறைசார் நாகரீகமற்ற, பள்ளிக் குழந்தைகளை, ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கை அது.

ஆசிரியரிடமும் குழந்தைகளிடமும் அவர் மன்னிப்புக் கோர வேண்டும்.