டார்க் – விமர்சனம்
நடிப்பு: அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்ராஜ் சுப்பிரமணி (எ) நட்டி, கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, சாகுல் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: கல்யாண் கே ஜெகன்
கதை: கணேஷ் கே பாபு
ஒளிப்பதிவு: ரவி சக்தி
படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்
இசை: மனு ரமேசன்
கலை இயக்கம்: சண்முகராஜா
ஸ்டண்ட்: நைஃப் நரேன்
தயாரிப்பு: எம்ஜி ஸ்டூடியோஸ், 5 ஸ்டார்
தயாரிப்பாளர்: ஏபிவி மாறன், கணேஷ் கே பாபு
வினியோகம்: 5 ஸ்டார் செந்தில்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கருணாகரன் (கே.பாக்யராஜ்) தனது சொந்த வீட்டின் கீழ்போர்ஷனில் அவரும், அவருடைய மகளான இளம்பெண் பிரியதர்ஷினியும் (அஞ்சனா நேத்ரன்) வாழ்ந்து வருகிறார்கள். அந்த வீட்டின் மேல்போர்ஷனில் மூன்று இளைஞர்கள் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே அந்த மேல்போர்ஷனில் வசிக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தீக்குளித்து இறந்துபோகிறார். இதன்பின் அங்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால், அதற்கு ‘பேய் வீடு’ என்ற பெயர் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பயத்தில் அங்கு யாரும் குடியிருக்க வரவில்லை.
ஆனால், பேய் – பிசாசு பற்றிய நம்பிக்கை இல்லாததாலும், வாடகை குறைவாக இருப்பதாலும், நாயகன் விக்னேஷ் (அஜய் கார்த்தி) அந்த மேல்போர்ஷனுக்கு குடி வருகிறார். ஒவ்வொரு இரவும் அச்சமூட்டும் அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்ந்து அவரை மிரட்டுகின்றன. அச்சத்திலும், அதிர்ச்சியிலும் குழம்பிப் போகிறார்.

ஓரிரவு. வீட்டின் உரிமையாளரான கருணாகரன், சரக்கடிக்க விக்னேஷுக்கு ‘கம்பெனி’ கொடுப்பதற்காக மேல்போர்ஷனுக்கு வருகிறார். இருவரும் மது அருந்துகிறார்கள். பின்னர் மர்மமான முறையில் விக்னேஷ், கருணாகரன் ஆகிய இருவருமே இறந்து போகிறார்கள்.
இது குறித்து புலனாய்வு செய்ய போலீஸ் அதிகாரி பாலச்சந்தர் (நட்ராஜ் சுப்பிரமணி என்ற நட்டி) வருகிறார். சம்பவ இடத்தை அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, சடலமாய் கிடந்த விக்னேஷ், திடீரென எழுந்து, “பாலச்சந்தர், போயிருங்க இங்கிருந்து” என்று கடுமையான குரலில் எச்சரித்துவிட்டு, மீண்டும் விழுந்து மயக்கம் அடைகிறார்.
‘நமக்கு முன் பின் அறிமுகம் இல்லாத இந்த நபர் நம் பெயரைச் சொல்லி எச்சரிக்கிறாரே’ என்று அதிர்ச்சி அடையும் போலீஸ் அதிகாரி பாலச்சந்தர், மயங்கிக் கிடக்கும் விக்னேஷை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
இவ்விசாரணையில் திடுக்கிடும் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அவை என்ன என்பது திகில் திரில்லரான ‘டார்க்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதை நாயகன் விக்னேஷாக அறிமுக நாயகன் அஜய் கார்த்தி இப்படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்திருக்கிறார். அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்கையில் அவர் அச்சத்தையும், ஆழ்மன பாதிப்புகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரி பாலச்சந்தராக நட்ராஜ் சுப்பிரமணியன் (எ) நட்டி நடித்திருக்கிறார். வழக்கம் போல் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். படத்தின் இறுதியில் பேய் உலவும் இடத்தில் அவர் தன்னந்தனியாக இருந்து, பார்வையாளர்கள் அனைவரையும் பதறச்செய்து விட்டார்.
வீட்டின் உரிமையாளர் கருணாகரனாக கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். தனது அனுபவ நடிப்பை திரையில் அவர் வழங்கிக்கொண்டிருக்கையில் அவரது மறைவின் ஞாபகம் நம் மனதில் தோன்றி கலங்கச் செய்கிறது.
அவரது மகள் பிரியதர்ஷினியாக அஞ்சனா நேத்ரன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பட்டும் படாமலும் வந்து போகும் இவர், படத்தின் பின்பகுதியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, சாகுல் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
கணேஷ் கே பாபு எழுதிய இப்படக்கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கே ஜெகன். சின்ன பட்ஜெட்டில், குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைப் படைத்து, ‘அடுத்து என்ன நடக்கும்’ என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை தங்கள் சீட்டின் நுனியில் அமரச் செய்து திகிலாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்று, யூகிக்க முடியாத புதுமையான கிளைமாக்ஸுடன் முடித்திருக்கிறார் இயக்குநர்.
ஹாரர் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவை ரவி சக்தியும், பின்னணி இசையை மனு ரமேசனும், படத்தொகுப்பை கதிரேஷ் அழகேசனும் வழங்கியிருக்கிறார்கள்.
‘டார்க்’ – புதுமையான அமானுஷ்ய படங்களை விரும்புகிறவர்கள், பார்த்து, பயந்து, மகிழலாம்!
ரேட்டிங்: 3.5/5
