கத சொல்லப் போறோம் – விமர்சனம்

நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். போலீசாரும் அந்த பெண்ணை நரேனுடன் சேர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாருடன் நரேன் ரோட்டில் நின்று கொண்டிருக்கும்போது, குழந்தையை கடத்திய அந்த பெண் இவர்களை பார்த்து ஓட்டம் பிடிக்கிறார். இதை பார்த்த நரேனும், போலீசாரும் அந்த பெண்ணை துரத்துகின்றனர். அப்போது, அந்த பெண் எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுகிறார். அவளை நரேன் மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கு அந்த பெண் கோமா நிலைக்கு போகிறார்.

தனது குழந்தையை கடத்திய அந்த பெண்ணின் கையில் குழந்தை இல்லாததால் நரேன் என்ன செய்வதென்று யோசிக்கிறார். மேலும், அந்த பெண் கோமா நிலையில் இருந்து திரும்பினால்தான் தனது குழந்தை பற்றிய விவரம் தெரியும். அதனால், அந்த பெண்ணுக்கு தன் சொந்த செலவிலேயே சிகிச்சை செய்து வருகிறார். 8 வருடங்களாக அந்த பெண் கோமா நிலையில் இருந்து பின் இறந்துபோகிறார்.

தனது குழந்தை கடைசிவரை எங்கிருக்கிறது என்று தெரியாமல் போனதால் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார் நரேன். இந்நிலையில், ஒரு அனாதை ஆசிரமத்தில் நரேனின் குழந்தை வளர்வதாக அவருக்கு தகவல் வருகிறது. அந்த குழந்தை நரேனின் குழந்தைதானா? அந்த குழந்தை எப்படி அங்கு சென்றது? என்பதை அழகான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

நரேன் தனது அனுபவ நடிப்பால் மிகவும் கவர்கிறார். மகளை தொலைத்த அப்பாவின் வேதனையை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், விஜயலட்சுமியும் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த வேதனையில் இவர் துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதம்.

மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது குழந்தை நட்சத்திரங்களைத்தான். அவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கும், வீட்டில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகளில், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் வேதனையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

தவறானவர்களின் கையில் கிடைத்தால் பெற்றோர்கள் இருந்தும் அந்த குழந்தை தனது மகிழ்ச்சி மற்றும் உரிமையை பறிகொடுக்க நேரிடும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கல்யாண் குமார். மேலும், ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளின் வேதனையையும், பிஞ்சு மனதிலும் மிகப்பெரிய நல்லெண்ணங்கள் உண்டு என்பதையும் இப்படத்தில் ஆழமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்களை நன்றாக வேலை வாங்கியிருப்பதுதான் சிறப்பு.

பவன் குமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை தேவைக்கேற்றாற்போல் இருக்கிறது. ஜெமின் ஜாம் அயானத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

‘கத சொல்லப் போறோம்’ – பார்க்கலாம்!