கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், லிஸி ஆண்டனி, முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், பேபி ஸாரா, மோக்ஷா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: செல்லா அய்யாவு

ஒளிப்பதிவு: கே.எம்.பாஸ்கரன்

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ஜெயச்சந்திரன்

தயாரிப்பு: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்

தயாரிப்பாளர்: டாக்டர் ஐசரி கே கணேஷ் & விஷ்ணு விஷால்

வெளியீடு: ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இன்பன் உதயநிதி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா

2022ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகி, எவரும் எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ஃபேமிலி எண்டர்டெயினர் ‘கட்டா குஸ்தி’. கலக்கல் காமெடிப் படமாக மெகா ஹிட்டடித்த இந்த படம் வாரிக் குவித்த வசூல் தந்த ஊக்கத்தில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், அதே செல்லா அய்யாவு இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற பெயரில் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. ரசிகர்கள், திரைத்துறையினர், விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரண்டாம் பாகம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

ஒரு படம் வெற்றி பெற்றால், அதன் ’இரண்டாம் பாகம்’ என்று பெயரளவில் சொல்லிக் கொண்டு, முதல் பாகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் புதுக்கதை விடும் நம் சினிமாக்காரர்கள் மத்தியில், இயக்குநர் செல்லா அய்யாவு அந்த தவறைச் செய்யாமல், ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகத்தின் படக்கதையை புத்தம் புது புனைவுடன் கட்டமைத்திருக்கிறார்.

முதல் பாகத்தில் நாயகன் வீராவும் (விஷ்ணு விஷால்), நாயகியும் குஸ்தி வீராங்கனையுமான கீர்த்தியும் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் செய்துகொள்வது, பின்னர் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிரிவது, அதன்பின்னர் இணக்கம் ஏற்பட்டு, இருவரும் இணைந்து வாழ்வது என்பதாக கதை நிகழும். இந்த இரண்டாம் பாகத்தில், இணக்கமாய் இணைந்து வாழத் தொடங்கிய அந்த தம்பதியின் இல்லற வாழ்க்கையும், லட்சிய வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை காமெடி சரவெடியாய் சித்தரித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பமாகும்போது, நாயகன் வீராவுக்கும், நாயகி கீர்த்திக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அவர்களுக்கு மதிமலர் (பேபி ஸாரா) என்ற ஆறு வயது பெண் குழந்தை இருக்கிறது. கீர்த்தி ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் கிடைத்த ரயில்வே வேலை பார்த்துக் கொண்டே, குஸ்தியில் ‘தேசிய சாம்பியன்’ பட்டம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு பயிற்சியாளரிடம் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மனைவியின் லட்சியம் நிறைவேற உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வீரா வீட்டு வேலைகள் மொத்தத்தையும் தானே செய்வது, மதிமலரை பள்ளிக்கு அழைத்துச் செல்வது – திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவது உட்பட மகளை கவனித்துக் கொள்ளும் சகல பொறுப்புகளையும் தானே எடுத்துக் கொள்வது என முழுநேர ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக இருந்து வருகிறார்.

கீர்த்தி தன் மகளை கறாராக கண்டிப்புடன் வளர்க்க நினைக்கிறார். ஆனால், அதற்கு நேர்மாறாக வீரா ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், குஸ்தியில் கீர்த்தி வெல்வதை விரும்பாத அவரது பயிற்சியாளர், சில சதிச்செயல்களில் ஈடுபடுகிறார். வீராவை அவருக்குத் தெரியாமலே தன் சதிக்குக் கருவியாக பயன்படுத்துகிறார். வீரா மூலமே சில மருந்துகளை கீர்த்திக்குக் கொடுக்க வைக்கிறார். இதன்பின் நடந்த குஸ்தி போட்டியில் கீர்த்தி தோல்வி அடைவதுடன், ஊக்க மருந்து உட்கொண்டதாக சோதனையில் சிக்கிக்கொள்ள, இதற்கு தண்டனையாக ஒரு வருடம் போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடைக்குக் காரணமே தன் கணவன் வீரா தான் என்று கோபத்தில் கொந்தளிக்கும் கீர்த்தி, தன் மகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விடுகிறார். அத்துடன், பிடிவாதமாய் விவாகரத்து கோரி அங்கிருந்தபடியே நீதிமன்றத்தை நாடுகிறார்.

இதற்கு வீராவின் எதிர்வினை என்ன? விவாகரத்து கிடைத்ததா? அல்லது குழந்தைக்காக இருவரும் சேர்ந்தார்களா? கீர்த்தி மீண்டும் குஸ்தி விளையாட்டில் பங்கெடுத்து தன் திறமையை நிரூபித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு கலகலப்பாக விடை அளித்திருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் வீராவாக ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஹீரோயிசம்’ காட்டாமல், சாதாரண வேட்டி, சட்டை, தாடியுடன் பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். மனைவியின் திறமையை மதித்து ஊக்குவிக்கும் நல்ல கணவனாக, மகள் சுதந்திரமாய் வளர அனுமதிக்கும் நல்ல தந்தையாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தில் நாயகி நடிக்க நிறைய ஸ்கோப் இருப்பதை அனுமதித்து, தனக்கான பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் கேரியரில் இது மற்றுமொரு மகத்தான வெற்றிப் படம். வாழ்த்துகள் விஷ்ணு விஷால்!

நாயகியாக, குஸ்தி வீராங்கனை கீர்த்தியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். கிடைத்தற்கரிய மிகவும் வலிமையான கேரக்டர். அருமையாக செய்திருக்கிறார். குடும்பத் தலைவிக்கு உரிய பொறுப்பு, விளையாட்டு வீராங்கனைக்கு உரிய அர்ப்பணிப்பு, மற்றும் காதல், பாசம், தோல்வி ஆகிய அனைத்து உணர்வுகளையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இத்தம்பதியரின் மகள் மதிமலராக குழந்தை நட்சத்திரம் பேபி ஸாரா நடித்திருக்கிறார். இந்த படத்தின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்று – பேபி ஸாராவின் அற்புதமான நடிப்பு. ஒவ்வொரு சீனிலும் நொடிக்கு நொடி துல்லியமான எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தி, க்யூட்டாக நடித்து, பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார். இனி அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் நிச்சயம் குவியும்.

கெஸ்ட் ரோலில் வரும் யோகி பாபுவும் பார்வையாளர்களைக் கவருகிறார்.

பாக்யராஜின் ’முந்தானை முடிச்சு’ படத்தில் வரும் தீபாவை ஞாபகப்படுத்தும் வகையில் டீச்சராக வரும் மோக்ஷா, நாயகனின் மாமாவாக வரும் கருணாஸ், அவரது மனைவியாக வரும் லிஸி ஆண்டனி, நாயகியின் சித்தப்பாவாக வரும் முனிஸ்காந்த், நீதிபதியாக வரும் ரம்யா கிருஷ்ணன், வக்கீலாக வரும் காளி வெங்கட், டிடிஆராக வரும் கருணாகரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. முதல் பாகம் போலவே இதிலும் குஸ்தி விளையாட்டை போரடிக்காமல் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். அத்துடன் நகைச்சுவை கலந்து கணவன் – மனைவி உறவு, குழந்தையின் மனநிலை, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் போன்ற முக்கிய அம்சங்களை அழகாக ஒருங்கிணைத்துப் படைத்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து, அவர்களை நல்ல முறையில் வேலை வாங்கி, படத்தை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். சமீப நாட்களாக குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கத் தக்க நல்ல பொழுதுபோக்கு படங்கள் குறைந்து வரும் நிலையில், அந்த குறையை போக்க முயன்றிருக்கும் செல்லா அய்யாவு, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் செல்லா அய்யாவு! இதே ரூட்டில் பயணத்தைத் தொடருங்கள்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் “சம்பவக்காரி..”, “மகராசி…” பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவரது பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தேவையான உணர்வை பொருத்தமாக கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் படம் முழுவதையும் வண்ணமயமாக ஒளிப்பதிவு செய்து பார்வையாளர்களுக்கு காட்சிவிருந்து படைத்திருக்கிறார்.

‘கட்டா குஸ்தி 2’ – அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர்; குடும்பத்துடன் பார்த்து, விலா நோக விழுந்து விழுந்து சிரித்து, ரசித்து, மகிழலாம்!

ரேட்டிங்: 4.25/5