கான் சிட்டி – விமர்சனம்

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, மாஸ்டர் அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ

இசை: ஷான் ரோல்டன்

தயாரிப்பு வடிவமைப்பு: ராஜ்

ஆடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

நடன அமைப்பு: சந்தோஷ்

சண்டை பயிற்சி: ஆக்சன் சந்தோஷ்

தயாரிப்பு: ஹரிஷ் துரைராஜ்

தமிழ்நாடு திரையரங்க வெளியீடு: டெல்டா ஸ்டூடியோஸ்

வெளியீடு: டி.ஆர்.முத்துக்குமார் மற்றும் கே.ஜே.ஐயப்பன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

இப்படக்கதை 2017ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம் மங்களூரில் தொடங்குகிறது. நாயகன் சரவணன் (அர்ஜுன் தாஸ்), நாயகி மித்ரா (அன்னா பென்), மூதாட்டி ஜானகி (வடிவுக்கரசி), ஜானகியின் மகன் ஜாக்கி (யோகி பாபு) ஆகியோர் ‘சரவண பவன் ஹோட்டல்’ என்றொரு சிறு ஹோட்டலை நடத்தும் குடும்பமாக வாழ்கிறார்கள்.

ஏனோ தெரியவில்லை… நாயகன் சரவணனும், நாயகி மித்ராவும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. ஆனால், இவர்களோடு இருக்கும் மாற்றுத் திறனாளி சிறுவனான ஜீவாவிடம் (மாஸ்டர் அகிலன்), “உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” என்று கேட்டால், “அம்மா பிடிக்கும்” என்று மித்ராவின் காதில் விழுகிற மாதிரி சத்தமாகச் சொல்லும் ஜீவா, “அதைவிட அப்பாவைத் தான் ரொம்ப பிடிக்கும்” என்று குரலைத் தாழ்த்தி, சரவணனுக்கு மட்டும் கேட்குமாறு கூறுகிறான். இதில் சரவணனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

ஹோட்டல் வேலைகளைத் தவிர்த்து, சக்கர நாற்காலியோடு சிறுவன் ஜீவாவை பள்ளியில் கொண்டுபோய் விடுவதும், பின்னர் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதும் சரவணனின் அன்றாட வேலையாக இருக்கிறது. ஒருநாள் ஜீவாவை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு தாமதமாகச் செல்கிறார் சரவணன். அதற்கு முன்பே, சிறுவனின் ’பெரியப்பா’ என்று சொல்லி வந்த ஒருவர் ஜீவாவை சக்கர நாற்காலியோடு அழைத்துச் சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

‘ஜீவாவுக்கு பெரியப்பா என்று யாரும் இல்லையே’ என்று பதறும் சரவணனும், மித்ராவும் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். சிறுவனை கடத்தியது யார் என்று போலீஸ் துணையுடன் பள்ளி சிசிடிவி ஃபுட்டேஜ்களை ஆராய்ந்தபோது, சிறுவனை சக்கர நாற்காலியோடு தள்ளிச் செல்லும் நபரைப் பார்த்து சரவணன், மித்ரா உள்ளிட்ட அந்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கடந்த காலத்தில் இக்குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தான் பழி வாங்குவதற்காக ஜீவாவை கடத்தியிருப்பது தெரியவருகிறது.

எனில், உண்மையில் இவர்கள் யார்? 2010-ல் சென்னை போலீசின் பிடியிலிருந்து தப்பி இங்கு (கர்நாடகத்துக்கு) ஓடி வந்திருக்கும் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமா? அல்லது வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களா? இவர்கள் செய்த மோசடிகள் – சட்டவிரோத செயல்கள் – என்ன? இவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் சேர்ந்தது எப்படி? சிறுவன் ஜீவாவை கடத்திய நபர் யார்? இறுதியில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டானா, இல்லையா? இவர்கள் மீண்டும் போலீசில் சிக்கினார்களா, இல்லையா? என்பன போன்ற எண்ணற்ற குழப்பமான கேள்விகளுக்கு தெளிவாக விடை அளிக்கிறது ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதையின் நாயகன் சரவணனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். தான் பணிபுரியும் மின்வாரிய அலுவலகத்தில் தவிர்க்க முடியாமல் பண மோசடி செய்யும் கதாபாத்திரம் அவருக்கு என்றாலும், அவரது நடிப்பும், குரலும் வசீகரிக்கிறது. பாசம், ஏக்கம், வெறுப்பு, மோசடித்தனம் என சகல அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, நாயகனாக இது தனக்கு ஒரு மறக்க முடியாத படம் என்ற பெருமையை ஏற்படுத்தியிருக்கிறார். பாராட்டுகள் அர்ஜுன் தாஸ்!

நாயகி மித்ராவாக அன்னா பென் நடித்திருக்கிறார். ‘கொட்டுக்காளி’ படத்தில் பித்துப் பிடித்தது போன்ற கதாபாத்திரத்தில் கலக்கிய இவர், இப்படத்தில் முற்றிலும் வேறான கதாபாத்திரத்தில் – போலி வாடகை மேலாண்மை நிறுவனம் வைத்து மோசடி செய்யும் கதாபாத்திரத்தில் – ரொம்ப இயல்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது ‘மாற்றுத்திறனாளி’ மகன் ஜீவாவாக வரும் மாஸ்டர் அகிலன், துருதுருவென நடித்து கவனம் ஈர்க்கிறார்.

மூதாட்டி ஜானகியாக வடிவுக்கரசியும், அவரது மகன் ஜாக்கியாக யோகி பாபுவும் நடித்திருக்கிறார்கள். இவர்களது காம்பினேஷன் பிரமாதமாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. பணப்புழக்கத்திற்காக ஒரு அறக்கட்டளையை முகமூடியாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் இவர்கள் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

மின்வாரிய அலுவலக அதிகாரி கங்காதரனாக வரும் விடிவி கணேஷும், டீக்கடைக்காரர் சுட்டி அண்ணாவாக வரும் இமான் அண்ணாச்சியும் நகைச்சுவை வசனங்களுக்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

கல்யாணசுந்தரமாக வரும் நந்தகோபால், சுதாவாக வரும் தீபா ராமானுஜம், அப்துல் ரசாக்காக வரும் ராதா ரவி, கோபியாக வரும் அருள் தாஸ், எம்.எல்.ஏ செந்திலாக வரும் ஷாஜி சென், வரதராஜாக வரும் தம்பி ராமையா, டாக்டர் சுப்ரமணியாக வரும் ரமேஷ் திலக், ரங்கனாக வரும் பரத்வாஜ் ரங்கன், சந்திரசேகராக வரும் பொன்வண்ணன், சிவாவாக வரும் ராகு எசக்கி, சதாவாக வரும் சதானந்த் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். எமோஷனல், கமர்ஷியல், ஃபேமிலி சென்டிமெண்ட் ஆகிய அம்சங்களைப் புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். ஆனால், அள்ளிப் போட்டால் ஒரு கோணிப்பை கொள்ளாத அளவுக்கு எக்கச்சக்கமான லாஜிக் மீறல்கள். இவற்றை கவனமாக தவிர்த்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.

ஷான் ரோல்டனின் பாடலிசையும் பின்னணி இசையும் ஓ.கே ரகம். அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

‘கான் சிட்டி’ – பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் முயற்சி!

ரேட்டிங்: 3/5