பாலன் – தி பாய்: விமர்சனம்
நடிப்பு: ஃபர்ஸானா பலத்திங்கல், ஆதிசேஷன் கே.ஆர், முகமது ஸினான், ஜீன் பால் லால், கிரீஷ் ஏடி மற்றும் பலர்
இயக்கம்: சிதம்பரம்
எழுத்து: ஜித்து மாதவன்
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
இசை: சுஷின் ஷியாம்
கலை: அஜயன் சாலிசேரி
தயாரிப்பு: வெங்கட் கே. நாராயணா (KVN Productions) & ஷைலஜா தேசாய் ஃபென் (Thespian Films)
பத்திரிகை தொடர்பு (தமிழ்): ஸ்ரீ வெங்கடேஷ் கொலைக் குற்றத்தின் பேரில் ஒரு கர்ப்பிணிப் பெண் (ஃபர்ஸானா பலத்திங்கல்) மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவிக்கிறார். சிறைச்சாலையிலேயே அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான்.
சில ஆண்டுகளுக்குப் பின், சிறுவனான தன் மகனுடன் (ஆதிசேஷன் கே.ஆர்) விடுதலையாகி, வெளியே வருகிறார் தாய். வெளியுலகத்தில் இருக்கும் எவரையும் நம்பாமல், தன் கடந்த காலத்தை மறைத்துக் கொண்டு, வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு பணிகள் என்று தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு மகனுடன் வாழ்கிறார். தன் சொந்த அடையாளத்தையும், தன் கடந்த காலத்தையும் தெரிந்துகொள்ள எவராவது முயன்றால், உடனே அந்த இடத்திலிருந்து மகனுடன் வெளியேறி விடுகிறார்.

இந்நிலையில், தன்னந்தனியாக வசிக்கும் ஒரு மூதாட்டியின் (டாலி ஜூன்) வீட்டுக்கு, அவருக்குப் பணிவிடை செய்பவராக மகனுடன் செல்கிறார் தாய். அந்த வீட்டிலேயே சில காலம் தங்கியிருக்கவும், பள்ளியில் சேர்த்து மகனைப் படிக்க வைக்கவும் முடிவெடுக்கிறார்.
இத்தகைய சூழலில், எதிர்பாராத விதமாக அந்த வீட்டில் நடந்த ஒரு துர்சம்பவம் காரணமாக தாயும் மகனும் பிரியும் சூழல் ஏற்படுகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது? தாயும் மகனும் பிரியக் காரணமான அந்த துர்சம்பவம் என்ன? பிரிந்த தாயும் மகனும் இறுதியில் சேர்ந்தார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது, எமோஷனல் த்ரில்லரான ‘பாலன் – தி பாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மேற்கண்ட கதையில் தாயாக ஃபர்ஸானா பலத்திங்கல் நடித்திருக்கிறார். அத்தனை உணர்வுகளையும் தன் கண்களாலேயே பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிற ஆளுமைமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த அறிமுகப் படத்திலேயே ‘சிறந்த நடிகை’ என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறார். பாராட்டுகள் ஃபர்ஸானா பலத்திங்கல்!
அவரது மகனாக, சிறுவயது பாலனாக ஆதிசேஷன் கே.ஆர் நடித்திருக்கிறார். படத்தின் ஆன்மாவாக இருக்கும் ஆதிசேஷன், குழந்தைத்தனமும் அதே நேரம் சமயோஜிதமும் கலந்த ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து, அத்தனை பார்வையாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டைப் பெற்றுள்ளார். வாழ்த்துகள் ஆதிசேஷன் கே.ஆர்!
வளர்ந்துவிட்ட விடலைப் பருவ பாலனாக முகமது ஸினான் நடித்திருக்கிறார். தொலைந்துபோன தாயைத் தேடுகிற தவிப்பு, தனக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் ஏற்படும் அன்பு, காவல்துறை அதிகாரியிடம் ஆற்றாமையில் மன்றாடுவது என அருமையாக நடித்திருக்கிறார்.
தன்னந்தனியே வசிக்கும் மூதாட்டியாக டாலி ஜூன் நடித்திருக்கிறார். அவரது பேச்சும், உடல்மொழியும் ஆரம்பத்தில் டெரராக இருந்தாலும், அதன்பிறகு பாசக்கார மூதாட்டியாக வெளிப்பட்டு கவனம் ஈர்க்கிறார்.
காவல்துறை அதிகாரியாக ஜீன் பால் லால் நடித்திருக்கிறார். பழிவாங்கும் எண்ணத்தில் ஊறிக்கிடக்கிற தனக்கு வேண்டியதைச் செய்ய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிற பாத்திரத்திற்குப் பொருந்திப் போயிருக்கிறார்.
சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் அலெக்ஸாக கிரிஷ் ஏ.டி நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.
இப்படத்தை ஜித்து மாதவன் எழுதியுள்ளார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கியுள்ளார். தாய்க்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை – இதுவரை எந்த படத்திலும் சொல்லாத அளவுக்கு – இந்தப்படத்தில் எமோஷனலாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி மனதைக் கலங்க வைத்திருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.
சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை, காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிக்கொணரும் பணியை மிகச் சிறப்பாகச் செய்கிறது.
விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, காட்சிகளின் தேவைக்கேற்ப வேகமாகவோ, நிதானமாகவோ பயணித்திருக்கிறது.
‘பாலன் – தி பாய்: மிகச் சிறந்த படம்; அவசியம் பார்த்து மகிழுங்கள்!
ரேட்டிங்: 3.5/5
