கருப்பு – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், ஸ்வாசிகா, வேல ராம்மூர்த்தி, ஷிவதா நாயர், நமோ நாராயணன், மன்சூர் அலிகான், அனகா மாயா ரவி, ஜார்ஜ் மரியான், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், மாறன், சுப்ரீத் ரெட்டி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஆர்ஜே பாலாஜி

ஒளிப்பதிவு: ஜிகே விஷ்ணு

படத்தொகுப்பு: ஆர் கலைவாணன்

இசை: சாய் அபயங்கர்

கலை: அருண் வெஞ்சாரமூடு

ஸ்டண்ட்: விக்ரம் மூர்

நடனம்: ஷோபி பால்ராஜ், சாண்டி, அனுஷா விஸ்வநாதன்

தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பாபு

தமிழ்நாடு திரையரங்க வெளியீடு: சக்தி பிலிம் பேக்டரி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா

கேரளாவைச் சேர்ந்தவர் பெரியவர் இந்திரன்ஸ். அவரது மகள் பினுவுக்கு (அனகா மாயா ரவி) கல்லீரலில் கோளாறு. கல்லீரல் மாற்று அறுவை செய்தாக வேண்டிய கட்டாயம். அதை சென்னையிலுள்ள மருத்துவமனையில் தான் செய்ய வேண்டும் என்ற நிலை. நகையை விற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணத்தைத் தேற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு, மகளையும் அழைத்துக் கொண்டு, ரயிலில் சென்னைக்கு வருகிறார் இந்திரன்ஸ்.

சென்னைக்கு இந்திரன்ஸ் புதியவர் என்பதால் அவர் வழி கேட்க, அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மர்மக்கும்பல் ஒன்று, அவரிமிருந்த மொத்த நகைகளையும் வழிப்பறி செய்து, தப்பிச் சென்றுவிடுகிறது. இந்திரன்ஸ் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் அக்கொள்ளையர்களைப் பிடித்து வந்து, அவர்களிடமிருந்த நகைகளை மீட்கிறார்கள். எனினும், அந்த நகைகளை இந்திரன்ஸ் நீதிமன்றம் மூலமாகத் தான் வாங்க முடியும் என்று போலீஸார் சொல்ல, மாவட்ட நீதிமன்றத்துக்குச் செல்கிறார் இந்திரன்ஸ்.

இவர்களது வழக்கை எடுத்து நடத்தும் பேராசை பிடித்த வழக்கறிஞர் பேபி கண்ணன் (ஆர்.ஜே.பாலாஜி), தன் செல்வாக்கால் நீதிபதி (நட்டி) உள்பட அனைவரையும் விலைக்கு வாங்கி, அந்த நீதிமன்றத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஒரு மாஃபியா போல் செயல்படுகிறார். அவரும், அவரது ஆட்களும் தங்களது கிளைண்ட்டான இந்திரன்ஸின் நகையை மீட்க முயலாமல், வழக்கை இழுத்தடித்துக்கொண்டு, ஃபீஸ், பிரியாணி, சிகரெட் என்று பணம் கறக்கிறார்கள்.

இந்த நீதிமன்றம் மூலம் தனக்கு நீதி கிடைக்காது என்று விரக்தியும், வெறுப்பும் கொள்ளும் இந்திரன்ஸ், நீதிமன்ற வளாகத்திலுள்ள வேட்டை கருப்பசாமி சிலைக்கு மிளகாய் சாந்து தேய்த்து, கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகிறார். அவரது உருக்கமான வேண்டுதலைக் கேட்கும் நீதிக்கான தெய்வமான வேட்டை கருப்பசாமி (சூர்யா), பூமிக்கு இறங்கி வந்து, சரவணன் என்ற பெயர் கொண்ட வழக்கறிஞராக மாறி, நீதிமன்றத்தில் இந்திரன்ஸுக்கான வழக்கறிஞராக ஆஜராகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? வழக்கறிஞர் சரவணன் என்ற கருப்பசாமிக்கும், வழக்கறிஞர் பேபி கண்ணனுக்கும் இடையே நடந்த ‘ஆடுபுலி ஆட்டம்’ என்ன? இந்திரன்ஸுக்கு நகை திரும்பக் கிடைத்ததா? அவரது மகளுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததா? சீர்கெட்டிருந்த நீதிமன்றத்தை வேட்டை கருப்பசாமி சீர் செய்தது எப்படி? பேராசையில் அநீதியுடன் செயல்பட்ட வழக்கறிஞர் பேபி கண்ணனுக்கு தெய்வம் தந்த தண்டனை என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு ஆக்ஷன் மற்றும் மாயாஜால வித்தைகளுடன் விடை அளித்திருக்கிறது ‘கருப்பு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

’வேட்டை கருப்பு’ என்ற சாமியாகவும், அவரது ‘வழக்கறிஞர் சரவணன்’ என்ற மானுட அவதாரமாகவும் சூர்யா நடித்திருக்கிறார். குதிரை மீது வேட்டை கருப்பாக வரும்போது அவரது முகத்தில் அத்தனை ஆக்ரோஷம் தெறிக்கிறது. அநீதியால் பாதிக்கப்படும் மக்களின் துன்பங்களைக் கண்டு மனம் துடிப்பவராகவும், அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக அதிரடி ஆக்ஷனில் இறங்குபவராகவும் சூர்யா பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரது நடிப்பை திரையரங்கில் பார்வையாளர்கள் பார்த்து, ரசித்து, கொண்டாடுகிறார்கள். நெடுநாட்களாக சூர்யாவுக்கு கிடைக்காமலிருந்த ‘திரையரங்க வெற்றி’ இந்த படத்தின் மூலம் கிடைக்கப்போவது நிச்சயம். உண்மையிலேயே இந்த படத்தில் அவர் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார். பாராட்டுகள் சூர்யா!

வில்லனாக, வழக்கறிஞர் பேபி கண்ணனாக ஆர்ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். பேராசையுடன் தனது கிளைண்டுகளிடம் பணம் கறக்கும்போதும், சாமி என்று தெரிந்தே வேட்டை கருப்புடன் சவால் விட்டு மோதும்போதும் வில்லத்தனத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

வழக்கறிஞர் சரவணனாக வரும் வேட்டை கருப்புக்கு உதவிக்கரம் நீட்டும் ப்ரீத்தி என்ற நல்ல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்த அழகான குந்தவை தானா இவர் என்று பார்வையாளர்கள் புலம்பும் அளவுக்கு அவரது முகத்தில் முதுமை ஏறியிருக்கிறது. நடிப்பிலும் செயற்கைத்தனம் தெரிகிறது. திரிஷா நடிப்புக்கு முழுக்குப் போடும் நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

கேரளாவிலிருந்து சென்னைக்கு வரும் அப்பாவி பெரியவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், அவரது மகள் பினுவாக வரும் அனகா மாயா ரவி, ஊழல் கறை படிந்த மாவட்ட நீதிபதியாக வரும் நட்டி நட்ராஜ், மற்றும் ஸ்வாசிகா, வேல ராமமூர்த்தி, ஷிவதா நாயர், நமோ நாராயணன், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், மாறன், சுப்ரீத் ரெட்டி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் ஆர்ஜே.பாலாஜியே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்காக வேட்டை கருப்புவே வந்திறங்கி நீதி பெற்றுத் தரும் கதையை ஃபேண்டஸி கலந்த கமர்ஷியல் பாதையில் நகர்த்தியிருக்கிறார். நீதி வேண்டிச் செல்லும் நீதிமன்றத்திலேயே ஊழல் அழுக்குகள் சூழ்ந்திருப்பது, அதனால் மக்கள் எத்தனை துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இவர் பிரமாண்டமாகவும், கற்பனையாகவும் வேட்டை கருப்புவை சித்தரித்திருக்கும் விதத்தைப் பார்த்தால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, கடவுள் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். சமூகக் கருத்துள்ள புராணப்படங்களை படைத்தளித்தவர் என்ற பெயர் பெற்றவர் ’அக்கால ஏ.பி.நாகராஜன்’. அதுபோல, ’இக்கால ஏ.பி.நாகராஜன்’ ஆர்ஜே, பாலாஜி என்று சொல்லத் தோன்றுகிறது. பாராட்டுகள் ஆர்ஜே. பாலாஜி!

ஜி.கே.விஷ்ணுவின் ஆக்‌ஷன் கமர்ஷியலுக்கு ஏற்ற ஒளிப்பதிவு, சாய் அபயங்கரின் ஆவேசமான பாடலிசை மற்றும் மிரட்டலான பின்னணி இசை, ஆர்.கலைவாணனின் ஷார்ப்பான படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் அருமையான அரங்க அமைப்பு, விக்ரம் மூரின் அபாரமான ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்டவை இப்படத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘கருப்பு’ – சூர்யாவின் சிறப்பான நடிப்புக்கும், பிரமாதமான மேக்கிங்கிற்கும் பேர் சொல்லும் வெற்றிப்படம் இது; அவசியம் கண்டு களியுங்கள்!

ரேட்டிங்: 4/5