லீடர் – விமர்சனம்
நடிப்பு: லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், விடிவி கணேஷ், பேபி இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், பாத்மென், யோகிராம், வேலருஞ்சலம், நிரஞ்சன் தாமஸ், அறந்தாங்கி நிஷா, ஆதித்யா கதிர், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன் பாபு, விஜயலட்சுமி, முருகன், ஜெயஸ்மிருதா, குமார் நடராஜன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
ஒளிப்பதிவு: வெங்கடேஷ் எஸ்
படத்தொகுப்பு: பிரதீப் ஈ ராகவ்
இசை: ஜிப்ரான் வைபோதா
பாடல் வரிகள்: கபிலன், விவேகா, மோகன் ராஜன்
நடனம்: சங்கரய்யா டி
கலை: ஜி.துரைராஜ்
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ
தயாரிப்பு: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
பிரபல ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ அதிபர் லெஜண்ட் சரவணன், கடந்த 2022ஆம் ஆண்டு ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஒரே அடியில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களைத் துவைத்து வானத்தில் பறக்க விடுவது, நிறைய கவர்ச்சி மங்கைகளுக்கு மத்தியில் நடனமாடுவது, ஹீரோவை ‘இந்திரன், சந்திரன்’ என்று மிகையாகப் போற்றிப் பாடும் பாடல்கள் இடம் பெற்றது போன்ற அதீத மசாலாத்தனங்களால் அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற முடிந்தது. இந்த குறைகளைத் தற்போது திருத்திக்கொண்டுள்ள லெஜண்ட் சரவணன், ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘கருடன்’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கமர்ஷியல் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தனது இரண்டாவது படமான ‘லீடர்’ திரைப்படத்தில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ‘யதார்த்த ஆக்ஷன் ஹீரோ’வாக கொடிகட்டிப் பறந்திருக்கிறார். இந்த ‘லீடர்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

தூத்துக்குடி துறைமுகப் பகுதியில், கார்களின் பழுது நீக்கும் ‘கார் ஒர்க் ஷாப்’ வைத்து நடத்தி வருகிறார் தங்கப்பழம் (விடிவி கணேஷ்). அவரிடம் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் நாயகன் சக்திவேல் (லெஜண்ட் சரவணன்). துறைமுகத்திற்கு வருவோரின் கார்களைப் பழுது பார்ப்பதே சக்திவேலின் பிரதான வேலை.
மீரா (பாயல் ராஜ்புத்) என்ற தன் மனைவியை இழந்த மெக்கானிக் சக்திவேல், தனது ஏழு வயது மகளான ஐரீனுடன் (பேபி இயல்) வசித்து வருகிறார். மகள் ஐரீன் காது கேளாத மாற்றுத் திறனாளி. அவர் மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் சக்திவேல், கண்ணின் இமை போல் அவரை காத்து வருவதோடு, மகளோடு சேர்ந்திருப்பதைத் தவிர வேறு பெரிய விருப்பம், ஆசை ஏதும் இல்லாதவராக இருக்கிறார்.
தூத்துக்குடி துறைமுகத்தைச் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சால்ட் (பாகுபலி பிரபாகர்) என்ற லோக்கல் தாதா, தி டெவில் (சந்தோஷ் பிரதாப்) என்ற சர்வதேச ‘கார்ப்பரேட்’ தாதாவோடு இணைந்து, போதை மருந்துகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல பொருட்களை கண்டெய்னர் மூலம் கடத்தி பெரிய அளவில் பணம் சம்பாதித்து வருகிறார்.
ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி சத்தியமூர்த்தி (லால்). அவருடைய மகள் இந்திரா சத்தியமூர்த்தி (ஆண்ட்ரியா ஜெரேமியா). லோக்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர். அவர் துறைமுகத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுத்து ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக செயலாற்ற முனைகிறார். ஆனால், லோக்கல் தாதாவான சால்ட், பணத்தைக் கொட்டிக் கொடுத்து அடிஷனல் டிஜிபி வரை பல அதிகார மையங்களையும் கைக்குள் வைத்திருப்பதால் இன்ஸ்பெக்டர் இந்திராவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு விடுகிறது.
இந்நிலையில், தாய்லாந்திலிருந்து அமோனியம் நைட்ரேட் என்ற ஆபத்தான வெடிபொருள், ஒரு கண்டெய்னர் நிறைய தூத்துக்குடி துறைமுகத்துக்கு சட்ட விரோதமாக அனுப்பி வைக்கப்படுகிறது. பயங்கர நாசவேலைக்கான சதித்திட்டத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் இந்த வெடிபொருளை தூத்துக்குடிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று துடிக்கிறார் லோக்கல் தாதா சால்ட். அந்த கண்டெய்னரில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சரியாக சந்தேகப்படும் இன்ஸ்பெக்டர் இந்திரா, துப்புத் துலக்க, தினமும் துறைமுகத்துக்குள் போய்வரும் கார் மெக்கானிக் சக்திவேலின் உதவியை நாடுகிறார். சக்திவேல் மறுக்கவே, அவரது பாசத்துக்குரிய மகள் ஐரீனை கடத்தி வைத்துக்கொண்டு, லோக்கல் தாதா சால்ட் தான் கடத்திவிட்டதாக நாடகம் ஆடுகிறார் இந்திரா.
மகளைக் காப்பாற்ற இந்திரா சொல்லும் வேலையைச் செய்யும் சக்திவேல், அந்த கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். அதன் பின்னர் தான் தெரிகிறது, இவை அனைத்தும் இன்ஸ்பெக்டர் சந்திரா போட்ட திட்டம் அல்ல, கார் மெக்கானிக் சக்திவேல் போட்ட திட்டம் என்று!
சக்திவேல் ஏன் இப்படி செய்ய வேண்டும்? இதன் பின்னணி என்ன? உண்மையில் சக்திவேல் யார்? ‘பொன்மாறன்’ என்ற நிஜப் பெயர் கொண்ட அவரது உண்மையான பணி தான் என்ன? அவருக்கும் லோக்கல் தாதா சால்ட் மற்றும் சர்வதேச கார்ப்பரேட் தாதா தி டெவில் ஆகியோருக்கும் என்ன சம்பந்தம்? அவரது மனைவி மீரா இறந்தது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு திடுக்கிடச் செய்யும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக விடை அளிக்கிறது ‘லீடர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் நாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் சக்திவேல் என்ற புனைப்பெயரும், இரண்டாம் பாதியில் பொன்மாறன் என்ற நிஜப்பெயரும் கொண்ட கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான தனித்துவமான நடிப்பில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். மசாலா ஹீரோக்கள் போல் ‘பில்டப்’ என்ற பெயரில் யதார்த்தத்துக்குப் புறம்பாய் அலட்டிக்கொள்வது, வண்டி வண்டியாக பஞ்ச் வசனம் பேசுவது போன்றவை எதுவும் இல்லாமல், அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் தனது நாயக கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பாசத்துக்குரிய மகளுக்காக துடிப்பது, கடமை என்ற போதிலும் மனைவியை சுட்டுக்கொல்ல பயப்படுவது, அப்பா யார் என்றே தெரியாமல் வெறுக்கும் தன் மகளிடம் ’நான் தான் உன் அப்பா’ என்று சொல்ல முடியாமல் தவிப்பது, அதிரடி ஆக்ஷன் என்று வரும்போது ஆவேசமாக துவம்சம் செய்வது என்று செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் ஹீரோவாக ஜமாய்த்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். பாராட்டுகள்.
நாயகனின் மனைவி மீராவாக பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். அன்பு செலுத்துவதிலும், அதிரடி ஆக்ஷன் காட்டுவதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் மகளாகவும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஐரீனாகவும் பேபி இயல் நடித்திருக்கிறார். பார்வையாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும், கருணையையும் அள்ளிக்கொள்ளும் விதத்தில் க்யூட்டாக நடித்திருக்கிறார்.
சர்வதேச கார்ப்பரேட் தாதா தி டெவிலாக சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவர் தொடர்பான ட்விஸ்ட் அட்டகாசம். அதுபோல் லோக்கல் தாதா சால்ட்டாக வரும் பாகுபலி பிரபாகரும் பயமுறுத்தியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா சுந்தரமூர்த்தியாக வரும் ஆண்ட்ரியா ஜெரேமியாவும், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலமாக வரும் ஷாமும் போட்டி போட்டு அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி சத்தியமூர்த்தியாக வரும் லால், கார் ஒர்க் ஷாப் உரிமையாளர் தங்கப்பழமாக வரும் விடிவி கணேஷ், நாயகியின் அம்மா துர்காவாக வரும் ஐஸ்வர்யா, மற்றும் மரியம் ஜார்ஜ், அமிர்தா அய்யர், படவா கோபி, ஆதித்யா கதிர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். நாயகப் பாத்திரத்தில் வரும் லெஜண்ட் சரவணனின் லுக், வசன உச்சரிப்பு, அலட்டல் இல்லாத அழுத்தமான நடிப்பு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, அவரை அனைத்துப் பார்வையாளர்களும் எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் காட்டியதற்காக இயக்குநர் துரை செந்தில்குமாரைப் பாராட்டலாம். கதையின் அவுட்லைன் ‘பாட்ஷா’, ‘தெறி’ போன்ற வெற்றிப்படங்களை நினைவூட்டுகிறது. என்றாலும், பரபரப்பான ஆக்ஷன் படத்துக்குள் அப்பா – மகள் செண்டிமெண்டை அளவாகத் தூவி, அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்திருப்பது சிறப்பு. தனது அடுத்த படத்தையும் துரை செந்தில்குமார் தான் இயக்க இருப்பதாக லெஜண்ட் சரவணன் அறிவித்திருப்பது, இயக்குநரின் உழைப்புக்குக் கிடைத்த ஆகப்பெரும் பாராட்டு எனலாம். வாழ்த்துகள் துரை செந்தில்குமார்.
ஜிப்ரான் வைபோதா இசையில் ”முத்தைத்தரு…” என தொடங்கும் முருகன் பாடல் அருமை. ஏனைய பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை பிரமாதம். பிரித்து மேய்ந்துவிட்டார்.
பிரமாண்ட விஷுவல்களை திரையில் தீட்டியிருக்கும் வெங்கடேஷ் எஸ்ஸின் ஒளிப்பதிவு, ஷார்ப்பாக காட்சிகளைத் தொகுத்திருக்கும் பிரதீப் ஈ ராகவின் படத்தொகுப்பு, வந்தே பாரத் ரயிலுக்குள்ளும், வெளிநாட்டிலும் மகேஷ் மேத்யூ சிறப்பாக அமைத்திருக்கும் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அனைத்தும் இப்படத்தின் தரத்தையும், நேர்த்தியையும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உயர்த்த உறுதுணையாக இருந்துள்ளன.
‘லீடர்’ – அனைத்துத் தரப்பினரும் பார்த்து, ரசித்து, மகிழத்தக்க நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்!
ரேட்டிங்: 4/5
