ஓ பட்டர்ஃப்ளை – விமர்சனம்

நடிப்பு: நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: விஜய் ரங்கநாதன்

ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன்

படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன்

இசை: வைசாக் சோமநாத்

பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த்

கலை இயக்கம்: சரண்யா ரவிச்சந்திரன்

ஆடை வடிவமைப்பு: டீனா ரோசரியோ

தயாரிப்பு: ’ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ்’ – வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கல்லூரி நாட்களில் மாணவி கௌரியும் ( நிவேதிதா சதீஷ்), மாணவர் சூர்யா குமரவேலும் (சிபி சந்திரன்) காதலர்களாக இருக்கிறார்கள். ஆனால், இந்த உறவில் உண்மையுடன் இல்லாமல் ஏமாற்றுப் பேர்வழியாக சூர்யா இருப்பதை அறிந்து அவருடனான காதலை முறித்துக்கொள்கிறார் கௌரி.

பின்னர் அர்ஜுன் (அதுல்) என்பவருக்கும், கௌரிக்கும் திருமணம் நடந்தேறுகிறது. முன்பு சூர்யாவுடன் தனக்கிருந்த காதல் உறவு குறித்து கணவர் அர்ஜுனிடம் எப்படியாவது சொல்லி, தனது மனபாரத்தை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் கௌரி. ஆனால், கணவர் அர்ஜுனோ, திருமணமான மறுநாளே வேலை பறிபோய்விட, மன அழுத்தத்தில் இருக்கிறார்.

கணவரிடம் தனிமையான சூழலில் தனது பழைய காதல் பற்றிய உண்மையை மனம் திறந்து சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து, கொடைக்கானல் போகும் வழியிலுள்ள ’குறிஞ்சி’க்கு கணவரை அழைத்துச் செல்கிறார் கௌரி. அங்கே எதிர்பாராதவிதமாக பழைய காதலர் சூர்யா வந்து சேர, மூவருக்கும் இடையிலான தீவிர உணர்ச்சிப் போராட்டமும், அதன் விளைவுகளும் தான் ’ஓ பட்டர்ஃபிளை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இக்கதையின் முதன்மைக் கதாபாத்திரமான கௌரியாக நிவேதிதா சதீஷ் நடித்திருக்கிறார். மிகவும் பலம் வாய்ந்த – ஆனால், மிகவும் சிக்கலான – இந்த கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, அதற்குத் தேவையான நடிப்பை, உடல்மொழியை துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார். கணவரிடம் பழைய காதலை மறைத்ததால் ஏற்படும் பதற்றம் மற்றும் குற்றவுணர்வு, உண்மையை எப்படிச் சொல்வது என்ற குழப்பத்தால் வரும் தடுமாற்றம், பழைய காதலனைப் பார்த்தவுடன் தொற்றிக் கொள்ளும் எரிச்சல்… என சகலவிதமான உணர்வுகளையும் சிறப்பான நடிப்பு மூலம் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் நிவேதிதா சதீஷ்.

கௌரியின் கணவர் அர்ஜுனாக அதுல்லும், பழைய காதலர் சூர்யா குமரவேலாக சிபி சந்திரனும் நடித்திருக்கிறார்கள். இருவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, தேவையான நடிப்பை – குறை சொல்ல முடியாத அளவுக்கு – அருமையாக போட்டிபோட்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

விடுதிப் பணியாளராக, வண்ணத்துப்பூச்சிக்கு ‘ஜெபமணி’ என்று பெயர் சூட்டி பிரியத்துடன் வளர்க்கும் சகாயமாக நாசர் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு சிறிய கதாபாத்திரம் போல் தெரிந்தாலும், மிகவும் கருத்தாழம் உள்ள இக்கதாபாத்திரத்தை, நாசர் தனது அனுபவ நடிப்பால் தூக்கி நிறுத்தி, நம் மனசுக்கு நெருக்கமானதாக ஆக்கிவிடுகிறார்.

நாயகி கௌரியின் சகோதரியாக, பத்தொன்பது வயதிலேயே மடத்தில் சேர்ந்து துறவியாகிவிட்ட ரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமௌலி நடித்திருக்கிறார். குற்றவுணர்வில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரி கௌரிக்கு தத்துவார்த்த விளக்கமும் ஆறுதலும் தந்து, அவரை மீட்கும் கதாபாத்திரத்தில் செயற்கைத்தன்மை இல்லாமல் இயல்பாக நடித்து அழகு சேர்த்திருக்கிறார்.

கைரேகை பார்க்கும் பெண்மணியாக வரும் கீதா கைலாசமும் கவனம் ஈர்க்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன். திருமணமான நாயகியை அவளது முன்னாள் காதலன் சந்திப்பதும், அதனால் பிரச்சனைகள் எழுவதும் தமிழ்சினிமா அறியாத புத்தம்புது முடிச்சு அல்ல. இந்த அரதப் பழசான முடிச்சில் மருத்துவம், அறிவியல், தத்துவம் கலந்து, ‘எல்லா செயல்களும் தற்செயலாக நடப்பவை தான்’ என்ற கருத்தை வலியுறுத்தி, ஒரு வீடு, மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் ஆகியவற்றை வைத்து, புதுமையாக ஒரு வண்ணத்துப்பூச்சியையும் இணைத்து கதை எழுதி, போரடிக்காத வகையில் காட்சிகளை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் – ஓர் உளவியல் திரில்லர் பாணியில் – படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் வேதராமன் சங்கரன், இசையமைத்திருக்கும் வைசாக் சோமநாத், படத்தொகுப்பு செய்துள்ள புவனேஷ் மணிவண்ணன், கலை இயக்கத்தை கவனித்துள்ள சரண்யா ரவிச்சந்திரன், ஆடை வடிவமைப்புக்குப் பொறுப்பேற்றுள்ள டீனா ரோசரியோ உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும் உத்திரவாதம் அளித்திருக்கிறார்கள்.

‘ஓ பட்டர்ஃபிளை’ – பொறுமையும், புத்திக்கூர்மையும் இருந்தால், ஒரு நல்ல படத்தைப் பார்த்து ரசித்த திருப்தியைப் பெறலாம்!

ரேட்டிங்: 3.5/5