ஃபோர்த் ஃப்ளோர் – விமர்சனம்
நடிப்பு: ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் மற்றும் பலர்
இயக்கம்: எல்.ஆர்.சுந்தரபாண்டி
ஒளிப்பதிவு: ஜே.லக்ஷ்மன்
படத்தொகுப்பு: ராம் சுதர்ஷன்
இசை: தரண்குமார்
பாடல் வரிகள்: கு.கார்த்திக்
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி
நடன அமைப்பு: அபு சால்ஸ்
சண்டை அமைப்பு: டேஞ்சர் மணி
தயாரிப்பு: ’மனோ கிரியேஷன்’ ஏ.ராஜா
வெளியீடு: ’செவன்த் ஸ்டூடியோ’ கண்ணன்
பத்திரிகை தொடர்பு: ஏ.ராஜா
மென்பொருள் பணியாளரான நாயகன் ரணதீரன் (ஆரி அர்ஜுனன்) மும்பையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் அவரது முன்னாள் காதலியான அனுபமா என்ற அனு (பவித்ரா), தனக்கு ஓர் உதவி தேவை என்றும், அதற்காக அவசரமாக சென்னைக்கு வருமாறும் அழைக்கிறார். அவரது குரலில் பதற்றம் தெரிகிறது. இதனால் ரணதீரன் உடனடியாக பணி மாறுதல் பெற்று சென்னை வருகிறார்.
சென்னை புறநகரில் உள்ள ‘ராயல் டவுன்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரும் ரணதீரன், அங்குள்ள வாட்ச்மேனிடம், தனது நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸ் சாவியைக் கேட்கிறார். மூன்றாவது மாடியில் கெஸ்ட் ஹவுஸ் இருக்க, வாட்ச்மேனோ புழக்கத்தில் இல்லாத நான்காவது மாடியிலுள்ள ஃபிளாட் சாவியை தவறுதலாகக் கொடுத்துவிடுகிறார்.
நான்காவது மாடியிலுள்ள அந்த ஃபிளாட் ஒட்டடையும் தூசியும் அடைந்து, பாழடைந்த அறை போல் அலங்கோலமாக இருக்கிறது. அதை ரணவீரன் தானே சுத்தம் செய்துவிட்டு படுக்கையில் படுத்து தூங்குகிறார். அப்போது அவரை யாரோ தூக்கில் தொங்க விடுவது போலவும், மாடியிலிருந்து கீழே தூக்கிப் போடுவது போலவும் பயங்கரமான கனவுகள் வருகின்றன. அந்த கனவுகளில் வருபவை நிஜத்தில் நடப்பவை போலவே உள்ளன. அதில் அக்கம் பக்கத்து ஃபிளாட் மனிதர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் காட்சிகளாக வந்து போகின்றன. ஆனால், உண்மையில் ரணதீரன் ஃபிளாட்டைத் தவிர, அங்குள்ள ஏனைய ஃபிளாட்டுகள் அனைத்தும் காலியாக இருக்கிறன.
கனவுக்கும் நிஜத்துக்குமான இடைவெளியில் சிக்கித் தவிக்கும் ரணதீரன், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மர்மத்தைக் கண்டு பிடித்தாரா? அவரது முன்னாள் காதலி அனுபமா என்ற அனுவும் அவரது 5 வயது மகளும் என்ன ஆனார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு திகிலும் எதிர்பாராத திருப்பங்களும் கலந்து விடை அளிக்கிறது ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, ஐ.டி நிறுவன ஊழியர் ரணதீரனாக ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ஐ.டி நிறுவன ஊழியர் என்ற கதாபாத்திரத்துக்கு அவரது தோற்றமும் உடல்மொழியும் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. குறை சொல்ல முடியாத அளவு நடிக்கவும் செய்திருக்கிறார். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான குழப்பத்தை எண்ணி அவர் கலங்கும்போது, தனது முன்னாள் காதலிக்குப் பிறந்த தன் மகளை நினைத்து உருகும் போது, தொலைந்துபோன முன்னாள் காதலியைத் தேடும் போது… அவர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் முன்னாள் காதலி அனுபமா என்ற அனுவாக வரும் பவித்ரா, நாயகனின் தோழியாக வரும் தீப்ஷிகா ஆகிய இருவரும் அளவான அழகுடனும், அளவான நடிப்புடனும் தங்களுக்குக் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா வழக்கம் போல் மிரட்டியிருக்கிறார்.
தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர், நாயகனின் மகளாக நடித்திருக்கும் சிறுமி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் ஈர்த்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எல்.ஆர்.சுந்தரபாண்டி. திகில் பாணியிலான கதைக்களம் என்றாலும், அதை வெறும் திகில் காட்சிகளின் பின்னணியோடு மட்டுமே சொல்லாமல், காதல், கணவன் – மனைவி உறவு, குழந்தை செண்டிமெண்ட், சமூக பிரச்சனை, கிரைம் திரில்லர் போன்ற பல்வேறு அம்சங்களை பலவித அடுக்குகளாக கொண்டு வடிவமைத்திருக்கும் இயக்குநர், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு சம்பவங்களை அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்த ஜே.லஷ்மன், திகில் காட்சிகளுக்கு திரில் சேர்க்கும் பின்னணி இசை வழங்கிய தரண்குமார், அரங்குகளை அருமையாக வடிவமைத்த சுரேஷ் கல்லேரி, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வண்ணம் படத்தொகுப்பு செய்த ராம் சுதர்சன், சண்டைக் காட்சிகளை மிரட்டலாக வடிவமைத்த டேஞ்சர் மணி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் படத்துக்கு பலம்.
‘ஃபோர்த் ஃப்ளோர்’ – அமானுஷ்ய திகில் விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!
‘ரேட்டிங்’ – 3/5
