தாய் கிழவி – விமர்சனம்

நடிப்பு: ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ்காந்த், முத்துகுமார், இளவரசு, ஜார்ஜ் மரியான், ரெய்ச்சல் ரெபேக்கா, முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா மற்றும் பலர்

இயக்கம்: சிவகுமார் முருகேசன்

ஒளிப்பதிவு: விவேக் விஜயகுமார்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

மேக்கப் டிசைனர்: என்.செல்லதுரை ஆலங்குடி

தயாரிப்பு: ’பேஷன் ஸ்டூடியோஸ்’ சுதன் சுந்தரம் & ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சிவகார்த்திகேயன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காடுபட்டியில் இருக்கும் பெரிய ‘கார’ வீட்டில், கணவனைப் பிரிந்து வந்திருக்கும் தன் ஒரே மகள் (ரெய்ச்சல் ரெபேக்கா) மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார், 75 வயது விதவையான பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்). வட்டிக்குப் பணம் கொடுக்கும் அவர், அதை வசூலிப்பதில் கறாராகவும், இரக்கமற்றவராகவும் இருப்பதால், அவரிடம் கடன் வாங்கிய ஊர்மக்கள் அவரைக் கண்டாலே அச்சத்தில் ஓடி ஒளிவதோடு, அவர் எப்போது சாவார் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

பவுனுத்தாயி ஒருநாள் திடீரென்று உடல்நலம் குன்றி, சுயநினைவை இழந்து படுத்த படுக்கையாகி விடுகிறார். இதனால், அவரது இம்சைக்கு ஆளான ஊர்மக்களும், அவரோடு முன்பு சண்டைபோட்டு பிரிந்து சென்ற மூத்த மகன் உப்பிலியான் (சிங்கம்புலி), நடுமகன் விஜயன் (அருள்தாஸ்), இளைய மகன் செல்வம் (பாலசரவணன்) மற்றும் பவுனுத்தாயியின் மருமகள்கள் (முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா), மருமகன் (முத்துகுமார்) ஆகியோரும் குதூகலத்துடன் கூடிவந்து பவுனுத்தாயின் இறப்பை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நேரம் அங்கே வரும் மதுரை நகைக்கடை உரிமையாளர் (இளவரசு), சமீபத்தில் தன்னிடம் பவுனுத்தாயி 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விவரத்தைச் சொல்லிவிட்டுப் போகிறார். இதைக் கேட்டு மூன்று மகன்களும் பீதியும், பரபரப்பும் அடைகிறார்கள். காரணம், பெற்றோர்கள் இறந்த பிறகு அவர்களின் வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் மகன்களுக்கும், தங்க நகைகள், ரொக்கம் போன்ற அசையும் சொத்துகள் மகள்களுக்கும் சேரும் என்பது அந்த ஊர் வழக்கம். அதன்படி 160 பவுன் நகைகள் மொத்தமும் பவுன்தாயியின் ஒரே மகளுக்கு அல்லவா போய் சேர்ந்துவிடும் என்று பதறும் மூன்று மகன்களும், பென்னி க்விக் (முனிஷ்காந்த்) என்ற மைத்துன உறவினரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த நகைகளைக் கைப்பற்ற வீடு முழுவதும் ரகசியமாக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். பலனில்லை.

நகைகள் இருக்குமிடம் பவுனுத்தாயிக்குத் தான் தெரியும் என்பதால், எப்படியாவது அவரது இறப்பை தள்ளி வைத்து சிறிது நேரம் உயிர் பிழைக்கச் செய்து, அவரிடமே கேட்டு நகைகள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு மொத்த நகைகளையும் அபேஸ் செய்து தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ள மேற்கண்ட நான்கு கில்லாடிகளும் திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி, இவர்கள் தங்களின் சில லட்சங்களை செலவு செய்து, பவுனுத்தாயியை மதுரையில் உள்ள ”பெரிய” மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது சுயநினைவை மீட்க படாதபாடு படுகிறார்கள்.

அவர்களது முயற்சி வெற்றி பெற்று, பவுன்தாயிக்கு சுய நினைவு திரும்பியதா? நகைகள் இருக்குமிடத்தை அவர் தெரிவித்தாரா? மொத்த நகைகளையும் மகன்கள் கைப்பற்றினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு நிறைய காமெடியாகவும், கொஞ்சம் எமோஷனலாகவும் விடை அளிக்கிறது ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக, 75 வயது மூதாட்டி பவுனுத்தாயியாக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். அவரது 48 வருட திரைப்பயணத்தில் அவருக்கு மற்றுமொரு திருப்புமுனையாக பவுனுத்தாயி கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் ‘பவுனுத்தாயி’ கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. காமெடிக் காட்சிகளில் மட்டுமல்ல, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவ நடிப்பால் திரையை தெறிக்க விட்டிருக்கிறார். அவரது இந்த நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.

பவுனுத்தாயியின் மூத்த மகன் உப்பிலியானாக சிங்கம்புலி, நடுமகன் விஜயனாக அருள்தாஸ், இளைய மகன் செல்வமாக பாலசரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக காமெடியில் பிரித்து மேய்ந்திருக்கும் இவர்கள், எமோஷன் காட்சிகளிலும் கச்சிதமாக நடித்து படத்தைத் தாங்குகிறார்கள்.

பவுனுத்தாயியின் மகளாக ரெய்ச்சல் ரெபேக்கா வருகிறார். ஒரு மகனுக்குத் தாயாகி, கணவனைப் பிரிந்து வந்து தாயோடு வசிக்கும் கதாபாத்திரத்தில், ததும்பாத நிறைகுடமாக, இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பவுனுத்தாயியின் மருமகனாக வரும் முத்துகுமார், மருமகள்களாக வரும் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா, சொந்தக்காரர் பென்னி க்விக்காக வரும் முனீஷ்காந்த் ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கி, திரைக்கதையின் நகர்விற்கு உதவியிருக்கிறார்கள்.

கருப்பு கோயிலை காவல் காப்பவராக வரும் ஆத்தாடி குமரன், மதுரை நகைக்கடை உரிமையாளராக வரும் இளவரசு, தொலைக்காட்சியில் தோன்றி சைகை மூலம் செய்திகளை விவரிப்பவராக வரும் ஜார்ஜ் மரியான், பவுனுத்தாயியின் பேரனாக வரும் சிறுவன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன். அவரிடம் எக்கச்சக்கமாக நகைச்சுவை உணர்வும், பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, கமர்ஷியலாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லும் வித்தையும் இருப்பது பாராட்டத் தக்கது. ஒரு பெண் சுயமாக இயங்குவதோடு, வயதானாலும் தன்னம்பிக்கை குன்றாமல், தைரியத்துடன் பிறரின் ஆதரவையோ, அனுதாபத்தையோ எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்ற ஆழமான கருத்தை, மதுரை மாவட்ட கிராமப்புற வட்டார மொழி மற்றும் வாழ்வியலோடு நிறைய நகைச்சுவையையும், கொஞ்சம் எமோஷனையும் கலந்து சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

என்றாலும், சிவகுமார் முருகேசனின் ஆழ்மனதில் பிற்போக்குச் சிந்தனைகள் நிரம்பி இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் நமது கடமை. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தில், “தோழர் என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாக வருது” என்று காதை மூடிக்கொள்ளும் பிற்போக்கான நாயகனை உயர்வான கதாபாத்திரமாக படைத்திருப்பார். அதுபோல, இந்த ‘தாய் கிழவி’ படத்திலும் வட்டிக்கு விட்டு, அடாவடித்தனமாக வசூல் செய்யும் பிற்போக்கான பெண்மணியை உயர்வான கதாபாத்திரமாக தூக்கி நிறுத்தியிருப்பார். இயக்குநர் சிவகுமார் முருகேசனின் இந்த பிற்போக்குத்தனங்கள் அவர் ’கல்லா’ கட்ட பெரிதும் உதவலாம். ஆனால், ஆரோக்கியமான சமூகம் முன்னேற சிறிதும் உதவாது!

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையமைப்பு, விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு, சான் லோகேஷின் படத்தொகுப்பு, என்.செல்லதுரை ஆலங்குடியின் மேக்கப் டிசைன் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்துக்கு பலம்.

‘தாய் கிழவி’ – பார்த்து, ரசித்து, வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!

ரேட்டிங்: 3.5/5