’ஜவான்’ படத்திற்காக ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான ஒன்றிய அரசு விருது: குடியரசு தலைவர் வழங்கினார்!

பாலிவுட் முன்னணி நடிகரான ஷார்ருக் கான், தனது 2023ஆம் ஆண்டு வெளியீடான ’ஜவான்’ திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான ஒன்றிய அரசின் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ஷாரூக், தனது முதலாவது ஒன்றிய அரசு விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப் பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

இயக்குநர் அட்லீ எழுதி இயக்கிய ’ஜவான்’ படத்தில் ஷாருக் கானுடன் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71-வது ஒன்றிய அரசு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாருக் கான், ’ஜவான்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்பு வரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாருக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கான் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாருக் கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானா கானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-ல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக் கான் ஒன்றிய அரசின் விருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.