பிளாக்மெயில் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா, முத்துகுமார், லிங்கா, இயக்குநர் தமிழ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்

இயக்கம்: மு.மாறன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

பாடலிசை: ஜி.வி.பிரகாஷ்குமார், டி.இமான்

பின்னணி இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ‘ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி’ ஜெயக்கொடி அமல்ராஜ்

தமிழ்நாடு ரிலீஸ்: தனஞ்செயன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

கோயம்புத்தூரில் உள்ள மருந்தக குடோன் ஒன்றில் வேலை பார்க்கிறார் நாயகன் மணி (ஜி.வி.பிரகாஷ்குமார்), ஒருநாள் மருந்துகளை ஏற்றிச் செல்லும் மணியின் வேன் திருடு போய்விடுகிறது. அந்த வேனுக்குள் ’முக்கியமான’ பொருள் ஒன்றை வைத்திருந்ததாகச் சொல்லும் மருந்தக குடோன் உரிமையாளர் (முத்துக்குமார்), மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் மணியின் காதலியான ரேகாவை (தேஜு அஸ்வினி) கடத்தி வைத்துக்கொண்டு, அந்த ’முக்கியமான’ பொருளை கண்டுபிடித்துக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ரேகாவை மீட்டுச் செல்லுமாறு மணியை பிளாக்மெயில் செய்கிறார்.

இதனிடையே, கோவையின் பெரிய தொழிலதிபர் அசோக்கின் (ஸ்ரீகாந்த்) ஒரே மகள் காணாமல் போகிறார். அச்சிறுமி கடத்தப்பட்டிருப்பது அசோக்கிற்கு தெரிய வருகிறது. அவரிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறது.

அசோக்கின் மனைவியிடம் (பிந்து மாதவி) அவரது முன்னாள் காதலன், வேறு விதத்தில் பிளாக்மெயில் செய்கிறான்.

இந்த சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இதை செய்கிறார்கள்? நாயகன் மணியின் காதலியும், தொழிலதிபர் அசோக்கின் மகளும் மீட்கப்பட்டார்களா? அசோக்கின் மனைவிக்கு முன்னாள் காதலன் கொடுத்துவந்த மிரட்டல் முடிவுக்கு வந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மருந்தக குடோனில் வேலை செய்யும் சாமானிய இளைஞர் மணியாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். தன் காதலியை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தவிப்பது, அதற்காக ஒரு குற்றத்தைச் செய்யவும் துணிவது என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக, மருந்தகத்தில் பணிபுரியும் மீராவாக தேஜு அஸ்வினி நடித்திருக்கிறார். திருமணம் ஆகாமலே கருத்தரித்து விட்ட காதலி என்னும் தனது கதாபாத்திரத்தை குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.

தொழிலதிபர் அசோக்காக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். மகளைக் காணாமல் தவிப்பதும், பிளாக்மெயில் செய்பவர்களை எதிர்கொள்ளும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார்.

முன்னாள் காதலனின் மிரட்டலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிந்து மாதவி, நாயகனின் நண்பராக வரும் ரமேஷ் திலக், போலீஸ் அதிகாரியாக வரும் ஷாஜி, நெகட்டிவ் கேரக்டரில் வரும் லிங்கா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லியின் காமெடி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ’கண்ணை நம்பாதே’ ஆகிய தனது முந்தைய படங்களைப் போலவே இதையும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார். பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிற த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களுடனும் விறுவிறுப்புடனும் வந்திருக்கிறது இந்தப் படமும். தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதையின் ‘மூடு’க்கு பார்வையாளர்களைத் தயார்படுத்தி விடுகிறது திரைக்கதை. தனது காதலியை மீட்க, வேறு வழியின்றி தவறு செய்யத் துணியும் ஹீரோ, பணத்துக்காக முன்னாள் காதலியை மிரட்டும் வில்லன், மகளை மீட்க கோடி ரூபாயைக் கொடுக்க தயாராகும் தொழிலதிபர், தொடர்ந்து ஒவ்வொருவரிடமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் சிறுமி என படத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. அடுக்கடுக்காய் தொடர்ந்து வரும் திருப்பங்கள் மூலம் அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை எதிர்பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

சாம் சிஎஸ் பின்னணி இசையும், கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் கதையை த்ரில்லர் தளத்துக்கு இழுத்துச் செல்ல உதவுகிறது. சான் லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

‘பிளாக்மெயில்’ – தொடர்ந்து வரும் திருப்பங்களுக்காக பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3/5