”அன்று தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன்”: ‘கூலி’ படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

ரஜினிகாந்தின் 171வது படமான ‘கூலி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், பாலிவுட் நடிகர் அமீர்கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த படம் சுதந்திரதின விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் (ஆகஸ்ட்) 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உட்பட ’கூலி’ படத்தின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் நாயகன் ரஜினிகாந்த் பேசியதாவது:
எப்போதெல்லாம் இந்த ரஜினிகாந்த் என்ற மரம் விழப் போகிறதோ, அப்போதெல்லாம் என் ரசிகர்கள் என்னை தூக்கி விடுகிறார்கள். நான் அவர்களுடைய பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.
என்னுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. அது உழைப்புக்கு அப்பாற்பட்டது. அது தான் கடவுளுடைய குரல். உங்கள் குரலையும் கடவுளின் குரலையும் மனதில் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு பணமும் புகழும் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும் வெளியே மரியாதையும் இல்லை என்றால் அந்த பணமும் புகழும் ஒரு பொருட்டாகவே இருக்காது.
அனிருத் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவர் உச்சத்தில் இருக்கிறார். இந்தியாவின் முதல் ராக் ஸ்டார் அவர் தான். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் ரொம்ப திறமையான ஒரு தகுதியான இளைஞர். அனி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கிறது, ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்று லோகேஷ் கனகராஜ் சொன்னார். அதற்கு நான் லோகேஷிடம், யார் அதில் நடிக்கப் போகிறார்? என்று கேட்டேன். அதற்கு அவர், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்று சொன்னார். ஸ்ருதி அவருடைய அப்பா படத்தைவிட, உங்கள் படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என்று சொன்னார்.
கதை கேட்கும்போதே லோகேஷ், சார், நான் கமல் சார் ரசிகன் என்று சொன்னார். யோவ் நான் உன்னை கேட்டேனா? நீ யார் ரசிகர்னு நான் கேட்டேனா? அப்புறம் ஏன்? என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் அவர் மறைமுகமாக இது ஒரு புத்திசாலித்தனமான கதை, பஞ்ச் டயலாக் பேசுற விஷயங்கள் இல்லை என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது.
நான் கூலியாக வேலை பார்க்கும்போது நிறைய முறை திட்டு வாங்கி இருக்கிறேன். அப்படி ஒரு நாள் ஒருவர் தன் லக்கேஜை ஒரு வண்டியில் ஏற்ற சொன்னார். அதற்காக இரண்டு ரூபாய் டிப்ஸாக கொடுத்தார். அவருடைய குரல் எனக்கு ரொம்ப பழகினது போல உணர்வைத் தந்தது. அதற்கு பின்பு தான் தெரியுது அவர் என்னுடைய காலேஜ் நண்பர். காலேஜ் நாட்களில் அவரை நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். அப்போது அவர் என்ன ஆட்டம் ஆடினேடா என்றெல்லாம் சொன்னார். அன்று தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.