எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகளில், மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97%  மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம்   98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று  வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

தமிழ்- 96.12%
ஆங்கிலம்- 97.35%
கணிதம்- 96.46%
அறிவியல்- 98.56%
சமூக அறிவியல்- 97.07%

இதையடுத்து 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 3.7% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த பொதுத்தேர்வில் 152  சிறை கைதிகள் தேர்வு எழுதினர்.  இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவ,மாணவிகள் மே 2ம்தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் மே 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையத்தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.