எக்ஸ் வீடியோஸ் – விமர்சனம்

இண்டர்நெட் வசதியை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு ‘எக்ஸ் வீடியோஸ்’ என்பது என்ன என்பது தெரிந்திருக்கும். அது ஒரு இணையதளம். ‘போர்ன்’ (ஆபாச) இணையதளம். முழு நிர்வாணத்தையும், உடலுறவையும் அப்பட்டமாக காட்சிப்படுத்திய ‘பலான’ வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் இணையதளம். எனவே, ‘எக்ஸ் வீடியோஸ்’ என பெயரிடப்பட்ட திரைப்படம், எது பற்றி பேசும் என்பதற்கு யாரும் விளக்கவுரை எழுத வேண்டியதில்லை. போதாக்குறைக்கு, படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டுகள் போடும்போது, ‘இப்படத்தில் துணிச்சலாக நிர்வாணமாக நடித்த நடிகைகளுக்கு நன்றி’ என்ற கார்டு போட்டு, ‘ஆம், நீங்கள் யூகிக்கிற மாதிரியான படம் தான் இது’ என்று சொல்லாமல் சொல்லி விடுகிறார்கள்.

கதை நாயகன் அஜய்ராஜ் ஒரு பத்திரிகையாளர். ‘பலான’ இணையதளங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக, அத்தகைய இணையதளம் ஒன்றைப் பார்க்கிறார். அதில், சமீபத்தில் திருமணமான தனது நண்பனின் மனைவியான அக்ரிதி சிங், மெல்ல மெல்ல ஆடைகள் களைந்து முழு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுக்கும் வீடியோ இடம் பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்த பெண்ணை நிர்வாணமாக எவனோ வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டிருக்கிறான் என்று பதைபதைக்கும் அஜய்ராஜ், இது குறித்து நண்பனிடம் கூறுகிறார். கதிகலங்கிப் போகும் நண்பன், ‘சும்மா ஜாலிக்காக நான் தான் இந்த வீடியோவை எடுத்து என் கம்ப்யூட்டரில் வைத்திருந்தேன். அதை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்துகொள்கிறான். கணவன் ஏன் திடீரென தற்கொலை செய்துகொண்டான் என்று தெரியாமல் அக்ரிதி சிங் குழம்பித் தவிக்கிறார்.

அக்ரிதி சிங் போன்ற குடும்பப் பெண்களின் பலான வீடியோக்கள் எப்படி இணையதளங்களுக்கு வருகின்றன என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் பத்திரிகையாளர் அஜய்ராஜ். தனது நண்பன் நிஜய், போலீஸ் அதிகாரி ஷான் ஆகியோரின் உதவியுடன் அவர் புலன் விசாரணை செய்யும்போது, ‘சைபர் கிரைம் வில்லன்’ பிரபுஜித் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கூட்டாக பலான இணையதளம் நடத்துவதும், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பழுது பார்ப்போர், காமுகர்கள் போன்றோருக்கு அவர்கள் பணம் கொடுத்து, குடும்பப் பெண்கள் சம்பந்தப்பட்ட பலான வீடியோக்களை வாங்கி இணையதளத்தில் வெளியிடுவதும் தெரியவருகிறது.

அந்த சைபர் கிரைம் கும்பலை ஆதாரங்களுடன் பிடித்து போலீசில் ஒப்படைக்க முயற்சி செய்கிறார் அஜய்ராஜ். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? என்பது மீதிக்கதை.

பத்திரிகையாளராக வரும் அஜய்ராஜ் இயல்பாக நடித்திருக்கிறார். கணவனின் விருப்பதை நிறைவேற்றுவதற்காக ஆடைகள் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கும் அப்பாவி கவர்ச்சி மனைவியாக வரும் அக்ரிதி சிங் முழுமையாக ‘தாராளம்’ காட்டியிருக்கிறார். கேமரா ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியாமல், காதலனோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள வந்து நிர்வாணமாகும் ரியாமிக்கா கிளுகிளுப்பூட்டுகிறார். இவர்களைப் போல வேறு சில பெண்களும் நிர்வாணமாக கலைச்சேவை செய்திருக்கிறார்கள். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் உலகில் படுக்கையறையிலும், குளியலறையிலும் நடக்கும் அந்தரங்க விஷ்யங்கள் எப்படி இணையதளங்களுக்கு வருகின்றன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இந்த சைபர் கிரைம் தொழிலில் எவ்வளவு பணம் கொட்டுகிறது? என்கிற விவரங்களைத் திரட்டி கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர். ஆனால், விழிப்புணர்வை ஏற்படுத்துகிற சாக்கில் இளம்பெண்களை அம்மணமாக காட்டியிருப்பது, இதை ஒரு மலிவான, வணிக, பலான படமாக மாற்றிவிட்டது. நிர்வாணத்தை அப்படியே காட்சிப்படுத்தாமல், சஜஸ்டிவாகக் காட்டி கதை சொல்லியிருந்தால் சமூகப் பொறுப்புள்ள இயக்குனர் என பெயர் பெற்றிருப்பார்

‘எக்ஸ் வீடியோஸ்’ – தலைப்புக்கேற்ற படம்!