பாதுகாவலர்களிடம் இருந்து ரசிகரை காப்பாற்றிய விக்ரம்!

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சமீபத்தில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவரிடம் விக்ரம் நடந்துகொண்ட பணிவு, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதாவது, விழா மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த விக்ரமை காண ரசிகர் ஒருவர் பாய்ந்தோடி வந்து, விக்ரமை கட்டித்தழுவி அவரை அரவணைத்துக் கொண்டார். ரசிகரின் இந்த செயலை விக்ரம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், அருகிலிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விக்ரமிடம் இருந்து பிரித்து, அவரை ஆவேசத்துடன் கீழே தள்ளிவிட்டனர்.

இதைப் பார்த்து பதறிப்போன விக்ரம் உடனே எழுந்துவந்து “அந்த ரசிகரை எதுவும் செய்யாதீர்கள்” என்று பாதுகாவலர்களை விலக்கிவிட்டு, அவரை தன்னுடன் அழைத்து அவர் விருப்பம் என்ன என்று கேட்டார். விக்ரமுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ரசிகர் தனது ஆசையை அவரிடம் கூற, விக்ரமும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள செல்போனை முன்னோக்கி எடுத்தார். ஆனால், செல்பி வேண்டாம் என்று ரசிகர் சைகை செய்ய, அருகிலிருந்தவரிடம் செல்போனை கொடுத்து விக்ரமை கட்டியணைத்தவாறு அந்த ரசிகர் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகர் விக்ரமை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.

0m

இவை எல்லாவற்றையும் விக்ரம் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்த ரசிகர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்துக்கு சென்றாலும் ஒரு ரசிகனின் சின்ன ஆசையை நிறைவேற்றிய விக்ரமை அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கரவொலி எழுப்பி மனதார பாராட்டினார்கள்.

உண்மையில், அந்நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விக்ரம் தரப்பில் கூறியதாவது: “பாலக்காட்டில் இருக்கும் அந்த ரசிகர் பெயர் சலாம். அவர் விக்ரமின் தீவிரமான ரசிகர். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த ரசிகர் எப்படி பின்னால் இருந்து அனைவரையும் கடந்து வந்தார் என்பது தெரியவில்லை. விக்ரமை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் சலாமை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் விக்ரம், பாதுகாவலர்களிடம் பேசி அவரை விடுவித்தார். அதனைத் தொடர்ந்து சலாமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். செல்ஃபி எடுத்து முடித்தவுடன், விக்ரமை சலாம் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விக்ரமின் இந்தச் செயலுக்கு அவருடன் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

“இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி, விக்ரமை ‘வியத்தகு நடிகர்’ என வெகுவாகக் கொண்டாடி வருவதை அவரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ‘உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி, இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்’ என்று சொல்லி, அந்த செல்ஃபீயை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் விக்ரம்.”