சினிமா நடிகர் முதல் அரசியல் தலைவர் வரை: விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

சிறு வயது முதலே சினிமா மீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை காட்சிவாரியாக தன் நண்பர்களிடம் விவரித்து மகிழ்வார். எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக்க் கவர்ந்தன. அந்த படங்களை பல முறை பார்த்து ரசித்திருக்கிறார். சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கியது. நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க விஜயகாந்துக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்ததும், கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை கவனித்துக்கொள்ள வைத்தார் அவரது தந்தை.

நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்துக்கு மேலே சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர், விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் ’ஆட்டுக்கார அலமேலு’ படத்தை மதுரை ஏரியாவுக்கு வாங்கி வெளியிட்டபோது, அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் படம் வெளியான திரையரங்குகளுக்கு ஆட்டை அழைத்து சென்று விளம்பரம் செய்ய உதவியாக இருந்தார் விஜயகாந்த். இதன்பின் தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவு செய்து சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது எண்ணத்தை தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், ”இவர் என் தம்பி மாதிரி” என்று அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார் சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

அப்போது இயக்குநர் பி. மாதவன் ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தை இயக்கும் வேலையில் இருந்தார். அந்த படத்தை மதுரை ஏரியாவிற்கு சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வாங்கி இருந்தார்.

ரஜினியை போன்ற சாயலும், ஸ்டைலுமாக இருந்த விஜயகாந்தை பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டதாம். அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்தாராம்.

சென்னை சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கியவாறு விஜயகாந்த் பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி சென்றார்.

சுதாகர், ராதிகா நடிப்பில் ’இனிக்கும் இளமை’ படத்தை தொடங்கினார், இயக்குநர் எம்.ஏ.காஜா. அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார் சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக். விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது ’இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வழங்கினார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, விஜயகாந்த் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.

அதன்பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் ’அகல்விளக்கு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிப்படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ’சட்டம் ஒரு இருட்டறை’ தான்.

’சட்டம் ஒரு இருட்டறை’ படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கிறதே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார். யாரும் தேறவில்லை. ஒருநாள் உதவி இயக்குநர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்புக் கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துவிட்டது. உடனே அவரை பிடிக்கச் சொல்லி உதவியாளர்களை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள். “நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீர்களா?” என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, ”நான் நடிக்கத் தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னார். அதன்பிறகு தொடங்கியதுதான் ’சட்டம் ஒரு இருட்டறை’ படம். தமிழில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘தூரத்து இடிமுழக்கம்’, ‘உழவன் மகன்’,  சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். ’வைதேகி காத்திருந்தாள்’, ’அம்மன் கோவில் கிழக்காலே’, நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத் தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன.

பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறு நாள் கடந்தும் வெற்றிகரமாக ஓடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது ’செந்தூரப்பூவே’ படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து`நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை இயக்குநர் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார்.

2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காக, காத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த்.

கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமண விழாவுக்கு விஜயகாந்த் வருவதை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக் கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்ததாகச் சொல்லப்பட்டது. தொடர்ந்து, நடந்த திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் – விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கண்கள் சிவக்க வெகுண்டெழுந்தார் நடிகர் விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்களிலெல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடிகாட்டத் தொடங்கினார் விஜயகாந்த்.

அந்தநேரத்தில் கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக விஜயகாந்தின் மண்டபம் கையகப்படுத்தவிருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து விஜயகாந்துக்கு நோட்டீஸ் பறந்தது.

இந்த நிலையில், 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, ”தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத் தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது.

தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகித்த மக்கள்நலக் கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

தனித்துப் போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, கூட்டணிக்குச் சென்ற பின்னர் 7.9%, 6.1% எனக் குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆகச் சரிந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர். போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது.

தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வி அடைந்தது.

சட்டமன்றத்தில் கடுமையாக நடந்து கொண்டது, வேட்பாளரை அடித்தது, மனைவி – மைத்துனர் ஆதிக்கத்தில் கட்சியை விட்டது, செய்தியாளர்களிடம் கோபத்துடன் நடந்து கொண்டது, தூ என துப்பியது இப்படி இவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல.

இருப்பினும், தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே திகழ்ந்தார் விஜயகாந்த்.

1990ஆம் ஆண்டு தனது 38-வது வயதில் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது பிரேமலதாவுக்கு வயது 21. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலையில் காலமானார்.