விஜயகாந்துக்கு எதிரான பாமக வேட்பாளர் மாற்றம்: பாலு போட்டி!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநிலத் தலைவருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க.பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியின் புதிய வேட்பாளராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார்.