‘கண்ணை நம்பாதே’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடிய படங்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது:

0a1e

‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான ஒன்று. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதை படமாக்கியுள்ளோம். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்த பிறகு மு.மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரை சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் ஒரு எமோஷனலான லவ் ஸ்டோரியை சொன்னார். வெவ்வேறு ஜானர்களில் படம் முயற்சிக்க விரும்பியதையும் கூறினார். ஆனால், அவருடைய முதல் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதைப் போன்றே ஒரு க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லருடன் நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியமும் ட்விட்ஸ்ட்டும் இருக்கும்படியான கதையை உருவாக்க அவருக்கு வேண்டுகோள் வைத்தேன். அதன் பிறகு ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. உடனே படப்பிடிப்பிற்கு கிளம்பினோம். ஆனால், கொரோனா, என்னுடைய அரசியல் பயணம் ஆகிய காரணங்களால் இந்தப் படத்தின் பணிகளில் தாமதமானது. மு. மாறனுக்கும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மிகவும் பொறுமையாகவும் தேவையான ஆதரவையும் கொடுத்தார்கள். எல்லாருமே இதில் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்தப் படத்தின் பெரும்பகுதி இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் படமாக்கப்பட்டது.

இத்தனை கஷ்டங்களைத் தாண்டி இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் தூண். மிஸ்ட்ரி த்ரில்லர் கதைக்குத் தேவையான விஷயங்களை இதில் கொடுத்துள்ளனர். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்களுடன் இருக்கும்.

இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

நடிகை ஆத்மிகா:

தனது ஈர்க்கக்கூடிய அழகு மற்றும் நடிப்புத் திறனால் நடிகை ஆத்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை ஆத்மிகா பகிர்ந்துள்ளார். அவர் கூரியிருப்பதாவது:

0a1d

ஒவ்வொரு நடிகைக்கும் தங்களின் திறமையை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ‘கண்ணை நம்பாதே’ எனக்கு அப்படிப்பட்ட ஒரு படம். இது என் சினிமா பயணத்தில் முக்கியமானதொரு படமாக இருக்கும். மு. மாறன் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது, கதையோடு ஒன்றி விட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பது போல் இருந்தது. அவருடைய எழுத்தாற்றறில் உள்ள திறமை, அதை காட்சியனுபவமாக மாற்று விதம் அபாரமானது.  உதயநிதி ஸ்டாலினுடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம். அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை முடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவமுள்ள ஒரு படம். இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு ஆத்மிகா கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஆத்மிகாவும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார்.

இசை: சித்து குமார்,

ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்,

படத்தொகுப்பு: சான் லோகேஷ்,

கலை: என்.கே. ராகுல் பி.எஃப்.ஏ,

நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பிரபாகரன், வினோத் குமார் சி,

தயாரிப்புக் கட்டுப்பாடு: சுந்தரம் & கார்த்திக்,

சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,

ஆடை வடிவமைப்பாளர்: ஆர். திலகப்ரியா சண்முகம்,

ஒப்பனை: முனியராஜ்,

படங்கள்: ராமசுப்பு,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை மார்ச் 17, 2023 அன்று வெளியிடுகிறது.