விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை அ.தி.முக. கைப்பற்றியது

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,வான ராதாமணி மறைவைத் தொடர்ந்தே அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் தொட்டே அதிமுகவின் முன்னிலை தொடங்கியது. 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியாக 20-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13,407 வாக்குகளும், திமுக வேட்பாளர் 68,632 வாக்குகளும் பெற்றனர்.

இந்த சுற்றின் முடிவில், 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாங்குநேரி

நாங்குநேரியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த எச்.வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இதனால் நாங்குநேரி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் ரூபி மனோகரனை களம் இறக்கியது. அதிமுகவில் இருந்து ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் களம் இறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் களம் கண்டார். நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தலில் 66.10% வாக்குகள் பதிவாகின.

காலை வாக்கு எண்ணிக்கையில் சுணக்கம் ஏற்பட்டதால் இறுதிச் சுற்று முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 23-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாராயணன் 95,360 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 61,913 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் 2,662 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட 23 வேட்பாளர்களில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்களை தவிர அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.