தமிழகத்தை உலுக்கிய 2 நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் படம் – ‘தொட்ரா’!

ஜே.எஸ்.அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப் படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளரான மதுராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். சரவணக்குமார் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி  இயக்குனர் மதுராஜ் கூறியதாவது:

இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில், பண ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை ஏற்றத்தாழ்கள் ஆகிய இரண்டும் தான் உறவுகளை இணைப்பதோ பிரிப்பதோ செய்கின்றன.

மிகப்பெரிய பணபலம் உள்ளவர் சாதி ரீதியாக அடித்தட்டில் இருந்தாலும் மேல்தட்டில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள தடையிருப்பதில்லை.

பணமற்றவர்கள் தங்கள் மனதின் தேடலை நிறைவேற்றிக்கொள்ள முயலும்போதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. அப்படி ஒரு பிரித்தாளும் கும்பல் எல்லா ஏரியாக்களிலும் உள்ளது. சிங்கத்திடமிருந்து தப்ப முதலை வாய்க்குள் மாட்டிக்கொள்வது போல அங்கே காதலும் காதலர்களும் சிதைக்கப்படுகிறார்கள்.

காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இதில் வீட்டைவிட்டு வெளியேறும் காதலர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் ரொம்பவே கடினமான ஒன்று. அதிலும் அவர்கள் வழிமாறிப்போய் காதல் வியாபரிகளின் கையில் சிக்கிக்கொண்டால்..? இப்படி ஒரு விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் சமூக கண்ணோட்டத்துடன் பேசியுள்ளேன்.

இந்த மாதிரி சம்பவங்கள் சட்டத்தின் கண்காணிப்பில் வருவதே இல்லை. தன்னைச் சார்ந்தவர்களாகவே இருந்துகொண்டு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படி காதலர்களும், அவர்களைச்  சார்ந்தவர்களும் மாட்டிக்கொள்ளும் பல நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து கதையை செதுக்கியுள்ளோம்.

வடமாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இவ்வாறு இயக்குனர் மதுராஜ் கூறினார்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இசை – உத்தமராஜா

ஒளிப்பதிவு – ஆஞ்சி

படத்தொகுப்பு – ராஜேஷ் கண்ணன்

சண்டை பயிற்சி – விக்கி நந்தகோபால்

ஊடகத்தொடர்பு – ஏ.ஜான்