‘தமிழரசன்’ படத்தில் பாட கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு வாய்ப்பளித்த இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை பல கல்லூரிகளில் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ராணிமேரி கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடைபெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.

அப்படி பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்: “நாங்கள் சினிமாவில் பாட முடியுமா” என்று. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இளையராஜா, சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து, அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன், விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி, எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ படத்தில் அந்த 9 மாணவிகளையும் பாட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.