‘சபாஷ் நாயுடு’ இயக்குனர் திடீர் மாற்றம்: புதிய இயக்குனர் கமல்ஹாசன்!

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

சுமார் 80% காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இளையராஜா இப்படத்தின் இசைக்காக பணியாற்ற தொடங்கி இருக்கிறார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை கமலே ஏற்றுள்ளார். இது குறித்து கமல், “எனது படத்தின் இயக்குனர் ராஜீவுக்கு திடீரென உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்ஜெல்ஸில் 4-வது நாளாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு லைம் (Lyme) நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஏற்படும் மிக அரிதான நோய் பாதிப்பு. ராஜீவ் சிகிச்சையில் இருப்பதாலேயே படத்தை நான் இயக்கி வருகிறேன். அவர் தற்போது லாஸ் ஏஞ்ஜெல்ஸில் உள்ள மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை எங்கள் குழுவில் உள்ள ஒருவர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.