கேரள முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில்,  ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

பின்னர் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக முதல்வர் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கரோனா கட்டு்பபாடுகளை பின்பற்றி பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

கேரளாவில் அமையும் புதிய அரசில் 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இக்கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்கப்பட உள்ளது.

புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், மருத்துவர் ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. முதல் முறையாக எம்எல்ஏவான பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.