“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்?”: விஜய் சேதுபதி பதில்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், திரு ஒளிப்பதிவில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட’.

வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையை அடுத்துள்ள சாய்ராம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

எல்லாரும் கனவு காணுவாங்க. ஆனா, நான் காணாத ஒரு கனவு நடந்திருக்கு, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமா இருக்கு. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம்.

சினிமாவுக்கு நேத்து வந்தவன் நான். எனக்கே சில சமயங்கள்ல இது போதும்னு நினைப்பு வருது. ஆனா இத்தனை படங்கள் பண்ணியும் கூட, இவ்ளோ உயரம் வந்த பிறகும் கூட, ஒவ்வொரு சீன்லயும் அத்தனை அட்டாச்மென்ட்டோட நடிக்கிறார் ரஜினி சார். இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.  ரஜினி சார் செய்றதெல்லாம் பெரிய ஒர்க்.

ரஜினி சார், கேமராவுக்கு முன்னாடி நிக்கும்போது, ‘நான் கேமராவுக்கு முன்னாடி நிக்கல, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னாடி நிக்கிறதா நினைச்சுக்கறேன்’னு சொன்னார். அவ்ளோ ரெஸ்பெக்டோட நடிக்கிறாரு. எனக்கும் இந்த ரெஸ்பான்ஸிபிலிட்டி வரணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

“இந்தப் படத்துல நீங்க ரஜினி சாருக்கு நண்பனா, வில்லனா?” என்ற நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எப்போதுமே பெரிய ஆளை எதிர்த்தா தான் நாம பெரிய ஆள் ஆக முடியும். அதனால், இந்த படத்தில் நான் வில்லன்” என்றார்.