பொது திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து ‘அறம்’ படம் பார்த்தார் நயன்தாரா!

தண்ணீருக்கு அல்லாடும் ஒரு கிராமத்து மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து கோமல் சுவாமிநாதன்  எழுதி, இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை 1980களில் திரைப்படமாக எடுத்தார் கே.பாலசந்தர். சாதாரண மக்களின் கோணத்தில் அரசாங்கத்தை, அதிகாரிகளை, அரசியல்வாதிகளை நோக்கி கூர்மையான கேள்விகளை எழுப்பிய படம் அது.

அதற்குப்பிறகு, அதைவிட பல மடங்கு கூர்மையான கேள்விகளை ஆவேசமாக எழுப்பும் சமூக அரசியல் படமாக தற்போது வெளிவந்திருக்கிறது ‘அறம்’.

இப்படத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் துணைவியார் மதிவதனியின் பெயர் தாங்கிய மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் மேனேஜர் தயாரித்துள்ளார். புரட்சிகர சிந்தனைகள் கொண்ட கோபி நயினார் இயக்கியுள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை, சென்னை கே.கே.நகர் காசி திரையரங்கில் இன்று ரசிகர்களுடன் அமர்ந்து நயன்தாரா பார்த்தார். நயன்தாராவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

பின்னர், நயன்தாரா உதயம் திரையரங்கிற்குச் சென்று, அங்கும் சிறிது நேரம் ரசிகர்களுடன் ‘அறம்’ படத்தைப் பார்த்தார்.